படையினர் கையகப்படுத்திய காணியை மீட்டுத் தருமாறு வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபைச் செயலாளர் முதலமைச்சரிடம் கோரிக்கை
பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பண்டத்தரிப்பு காடாப்புலத்தில் பிரதேச சபைக்குச் சொந்தமான 40 பரப்புக்காணியை மீட்டுத் தருமாறு வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபைச் செயலாளர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைக் கோரியுள்ளார்.
.
அதன் மூலம் திண்மக் கழிவகற்றலைச் சீராக மேற்கொள்ள முடியும் என்றும் வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபைச் செயலாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.
வலி. தென்மேற்குப் பிரதேசத்திலுள்ள பிரதேசசபைக்குச் சொந்தமான காக்கைதீவுப் பகுதியில், யாழ்.மாநகர சபையால் கட்டுப்பாடின்றித் திண்மக் கழிவுகளும், மலக்கழிவுகளும் கொட்டப்படுகின்றன. அதனால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதுடன், சுற்றுப் புறத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் வயல் நிலங்களும் மேய்ச்சல் தரைகளும் குடிதண்ணீர்க் கிணறுகளும் மாசடைந்துள்ளன.
இந்தநிலை குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்குச் சுட்டிக்காட்டிய போதிலும், எதுவித முன்னேற்றமும் கிடைக்கவில்லை. அயற் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பல போராட்டங்கள் நடத்திய போதும் கழிவு கொட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்த நிலையில் பண்டத்தரிப்பு காடாப் புலத்திலுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் திண்மக் கழிவுகள் கொட்டுவதற்கு வசதியாக மேற்படி காணியில் சுற்று மதில் கட்டித் துப்புரவு செய்யப்பட்ட போது அந்தக் காணியை பாதுகாப்புப் படையினர் எதுவித அறிவித்தலும் இன்றி ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் அந்தத் திட்டத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்படி காணியில் திண்மக் கழிவுகளைக் கொட்டுவதற்கு, பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசசபைக்கு சொந்தமான காணியை மீட்டுத்தர வேண்டும். என்று வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபைச் செயலாளர் முதலமைச்சரைக் கோரியுள்ளார்.
படையினர் கையகப்படுத்திய காணியை மீட்டுத் தருமாறு வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபைச் செயலாளர் முதலமைச்சரிடம் கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
March 21, 2016
Rating:

No comments:
Post a Comment