சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வுக்கான பிரேரணை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசியலமைப்பின் ஊடாக சமஷ்டி அடிப்படையில் முன்வைக்கப்பட வேண்டுமென்ற பிரேரணை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட வேண்டும் என்று குறித்த பிரேரணையில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இப்பிரேரணையை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் சமர்ப்பித்திருந்தார்.இதன்போது மாகாண சபையின் சிங்கள உறுப்பினர்களான ஜயதிலக மற்றும் தர்மபால செனவிரத்ன ஆகியோர் எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இந்தப் பிரேரணையை மாகாண சபையில் நிறைவேற்றுவதன் மூலம் எதுவித பயனும் கிடைக்கப்போவதில்லை என்றும் அதன் காரணமாக மாகாண சபையில் இது நிறைவேற்றப்படக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் வாக்கெடுப்பின் போது வெளிநடப்புச் செய்திருந்தனர்.இதன் காரணமாக மாகாண சபை அமர்வில் சமூகமளித்திருந்த 28 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
வடமாகாண சபையின் 38 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் வாக்களிப்பின் போது சபையில் சமூகமளித்திருக்கவில்லை.
தென்னிலங்கையின் பிரதேசங்களை சிங்கள மக்களின் விருப்பின் பேரில் நிர்வாக அலகுகளாக பிரித்துக் கொள்ளலாம் என்று இன்று நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய அரசாங்கத்தின் நாடாளுமன்றம் இப்போது நடைமுறையில் இருக்கும் அதே வடிவில் தொடர்ந்தும் நடத்திச் செல்லப்படவேண்டும் என்றும் , நாடாளுமன்ற மேலவை (செனட்சபை) ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அரசியலமைப்பு வரைபில் உள்வாங்கிக் கொள்ள ஏதுவான வகையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு அதன் நகல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பிரேரணையின் நகல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டிராத நிலையில் அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று ஜயதிலக மற்றும் செனவிரத்ன ஆகிய மாகாண சபை உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வுக்கான பிரேரணை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்
Reviewed by Author
on
April 22, 2016
Rating:

No comments:
Post a Comment