தொழிலாளர் வயிற்றில் அடித்தவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்! ( வீடியோ ஆதாரம் )
தொழிலாளர் நலத்துறை அமைச்சராக சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவான நிலோபர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு லாயக்கற்றவர் நிலோபர். இதோ இந்த வீடியோவை பாருங்கள்.
அந்த வீடியோவில், கடந்த 2014ல் முதல்வர் ஜெ, வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது, அம்மாவை விடுதலை செய்யுங்கள் என அதிமுகவினர் தமிழகம் முழுவதும் சாலை மறியல், கடையடைப்பு போன்றவற்றை நடத்தினர். அப்போது வாணியம்பாடி நகரத்திலும் நடந்தது. அப்போது வாணியம்பாடி நகரமன்ற தலைவராக இருந்த நிலோபர், ஆதரவு கவுன்சிலர்கள் உட்பட அதிமுகவினருடன் வாணியம்பாடி பஜாருக்கு வந்தவர் கருணாநிதி ஒழிக என கோஷமிட்டவாரே திறந்திருந்த கடைகளை மூடச்சொன்னார். மூடாத கடைகளை அங்கிருந்த பொருட்களை கீழே தள்ளினார். வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பழக்கடை வைத்திருந்த 60 வயது மூதாட்டியின் பழக்கடைக்கு வந்து பழங்களை கீழே தள்ளினார், அந்த பாட்டி வேணாம் தாயீ, வேணாம் தாயீ என கையெடுத்து கும்பிட்டு கெஞ்சியும் மனமிறங்காமல் பழங்களை கீழே தள்ளிவிட்டவர், இப்ப கடையை மூடலன்னா இனிமே கடையே வைக்க முடியாது என மிரட்டிவிட்டு அடுத்தடுத்த கடைகளுக்கு சென்றார். அங்கிருந்த காய்கறி கடைகள், கறிக்கடை, ஹோட்டல்கள் என சென்று அங்கிருந்த தொழிலாளர்களிடம் மூடுடா கடையை என மிரட்டுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

நிலோபரின் ஆதரவாளர்கள் பயணிகளை ஏற்றிவந்த பேருந்து, பைபாஸ் சாலையில் சென்ற லாரியின் கண்ணாடிகளை அடித்து உடைப்பது, டிரைவர்களை மிரட்டினர். இன்னைக்கு 100 ரூபா சம்பாதிச்சா தான் நைட் வீட்ல அடுப்பெறியும் அப்படிங்கற தொழிலாளிங்க வயித்தல அடிச்சி, மிரட்டன இந்த எம்.எல்.ஏவை தொழிலாளர் நலத்துறை மந்திரியா நியமிச்சா எப்படிங்க என கேள்வி எழுப்புகின்றனர் வாணியம்பாடி சமூக ஆர்வலர்கள்.
நிலோபரா ? நிலோபர்கபிலா என சர்ச்சை:
அமைச்சர் நிலோபர், அவரது கணவர் டாக்டர் கபில். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவ் – மனைவி இடையே தகராறு வந்து, சொத்து தகராராகி, அது அடிதடியில் போய் நின்றது. இறுதியில் காவல்நிலையத்தில் பஞ்சாயத்து நடந்தது. சொத்து பிரிக்கப்பட்டதோடு, இருவரும் பிரிந்து வாழ்கிறோம் என எழுதி தந்துவிட்டு வந்தனர். மனைவியின் மிரட்டல்களில் இருந்து தப்பிக்க திமுகவில் இணைந்தார். கடந்த மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட திமுக நிர்வாகிகள் பட்டியலில் வேலூர் மேற்கு மாவட்ட மருத்துவரணி மா.செ பதவியை பெற்றார். இதில் ஆத்திரமான நிலோபர் தனது பெயருக்கு பின்னால் போட்ட கபில் என்கிற பெயரை நீக்கினார். சட்டமன்ற தேர்தலின் போது கட்சி தலைமையிடம், வாணியம்பாடி தொகுதியை கேட்டு விருப்ப மனு தந்தபோது, நிலோபர்கபில் என தந்தார். சீட் உறுதியானதும், நகரமன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்யும்போது நிலோபர் என கடிதம் தர அதை ஆணையாளர் ஏற்றுக்கொள்ளாமல் நிலோபர்கபில் என தாருங்கள் என கேட்டார். இவர் தர மறுக்க அவர் ராஜினாமாவை ஏற்க மறுத்தார். நீண்ட இழுபறிக்கு பின் நிலோபர்கபில் என தந்தார்.
வேட்பு மனு தாக்கலின் போதும் நிலோபர் என்றே தந்தார். பிரச்சாரத்தில் கணவனும் – மனைவியும் எதிரும், புதிருமாக இருந்தால் சங்கடம் என அறிந்து, சேர்ந்து வாழலாம் வாங்க என கணவருக்கு அழைப்பு விடுக்க அவரும் போய் சேர்ந்துக்கொண்டார். தேர்தலில் வெற்றி பெற்றதும் கணவர் சாகிதம் வந்து சான்றிதழ் வாங்கினார். கணவன் – மனைவி சேர்ந்து வாழட்டும் பிரச்சனையில்லை. வேட்புமனுவில் நிலோபர் என தந்துள்ளார். கட்சி தலைமை இவருக்கு தந்துள்ள பி பார்ம்மில் நிலோபர்கபில் என தந்துள்ளது. இதை தேர்தல் ஆணையம் எப்படி ஏற்றுக்கொண்டது?. இவர் நிலோபரா ? நிலோபர்கபிலா ? என கேள்வி எழுப்பும் எதிர்கட்சிகள் இதுப்பற்றி தேர்தல் ஆணையமும், அரசும் விளக்கம் தர வேண்டும் என கேட்பதோடு, புகார் தந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா என ஆலோசித்து வருகின்றனர்.
தொழிலாளர் வயிற்றில் அடித்தவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்! ( வீடியோ ஆதாரம் )
Reviewed by NEWMANNAR
on
May 28, 2016
Rating:

No comments:
Post a Comment