மட்டக்களப்பின் எல்லை கிராமங்கள் மகா ஓயாவுக்கு சொந்தம்! நடப்பது என்ன?
அண்மையில் மட்டக்களப்பின் எல்லை பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் தொடர்பாக பல பிரச்சினைகள் இடம்பெற்றமை யாவரும் அறிந்த ஒரு விடயம், இந்த குடியேற்றம் தொடர்பாகவும் எல்லைகள் தொடர்பாகவும் உண்மை நிலை இன்றுவரை மறைக்கப்பட்டு வருகின்றது.
நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரை ரெட்ணத்திடம் வினாவிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பை பொறுத்த வரையில் கிரான் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மாதவன, மயிலத்தமடு, சின்ன மாதவன ஆகிய பிரதேசங்கள் பல நூற்றாண்டு காலமாக வரலாற்று ரீதியாக மட்டக்களப்புக்கு உரிய எல்லை கிராமங்கள் ஆகும். செங்கலடி கிரான் பிரதேசத்துக்கு உரிய எல்லை என்றுதான் வரை படத்தில் இருக்கின்றது.
ஆனால் கடந்த 5 வருடங்களாக மாதவன மற்றும் மயிலத்தமடு ஆகிய இந்த இரண்டு கிராமங்களும் மத்திய அரசாங்கத்திற்கு உட்பட்டதால் இந்த கிராமங்களில் இராணுவம் நிலைகொண்டு இந்த இரண்டு இடங்களும் அம்பாறை மாவட்டத்துக்கு உட்பட்ட, மகா ஓயா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதி என வரையறுத்து கடிதம் மூலம் கூறப்பட்டிருக்கின்றது.
இது எந்த அளவுக்கு நியாயம் என்பது தெரியவில்லை, ஆனால் சிங்கள குடியேற்றங்கள் திட்டமிட்டு செய்யப்படுகின்றது.
கடந்த காலங்களில் இந்த அத்துமீறிய குடியேற்றம் மற்றும் எல்லை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நேரில் சென்று பார்வையிட்டு ஆதாரத்துடன் வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட இந்த 2 இடங்களும் மகா ஓயா பிரதேச செயலாளர் பிரிவுக்கு எவ்வாறு மாற்றப்பட்டது? இதற்கு யார் பொறுப்பு?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மத்திய அரசாங்கமும், நல்லாட்சி என்று கூறி இணக்கப்பாடு அரசியல் நடத்துகின்ற இந்த ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்கள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதற்கான நியாயம் என்ன? இதுதான் நல்லாட்சியா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைகளை பொறுத்த வரையில் நல்லாட்சி என்று கூறிக்கொண்டு மத்திய அரசாங்கம் தமிழ் பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ளுவது மட்டக்களப்பு செங்கலடி பிரதேசங்களுக்குரிய எல்லை கிராமங்களை, மகா ஓயா பிரதேச செயலகத்துக்கு மாற்றுவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.
எமது மண்ணையும், எமது நிலத்தையும், எமது வரையறுக்கப்பட்ட எல்லையையும் ,பாதுகாக்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது.
இதற்காகத்தான் அவர்கள் வாக்களித்துள்ளார்கள், இந்த கடமையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது மட்டக்களப்பு எல்லைக்கு உரிய கிராமம் என உறுதி செய்து, அந்த அத்து மீறிய சிங்கள குடியேற்றத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இது தமிழர்களுடைய நிலம் ஆகவே உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டு என இரா.துரை ரெட்ணம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பின் எல்லை கிராமங்கள் மகா ஓயாவுக்கு சொந்தம்! நடப்பது என்ன?
Reviewed by Author
on
June 08, 2016
Rating:

No comments:
Post a Comment