நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணியில் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்குங்கள்
இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணி நாளை(28) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மாந்தை மேற்கு பிரதேசசச் செயலகத்தில் இடம் பெறவுள்ளதாக நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணியின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
இலங்கை அரசாங்கமானது கடந்த காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரித்து இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பின்வரும் விசாரணை பொறி முறைகளை அல்லது அலுவலகங்களை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளது.
குறிப்பாக காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம்,இழப்பீட்டுக்கான அலுவலகம், விசேட சட்டவாளர்களையும், நீதிபதிகளையும், உள்ளடக்கிய விசாரணை பொறிமுறை,மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான அலுவலகம் போன்ற அலுவலகங்களை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளது.
மேற்படி அலுவலகங்கள் எவ்வாறு அமையவேண்டும்? எங்கு அமையவேண்டும்? மற்றும் கால எல்லை, போன்றவை தொடர்பாகவும், ஏனைய தங்களுடைய கருத்துக்களையும், வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
-நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்திலும், 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மடு பிரதேசச் செயலகத்திலும், 30 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மன்னார் பிரதேசச் செயலகத்திலும்,எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நானாட்டான் பிரதேசச் செயலகத்திலும் இடம் பெறவுள்ளது.
எனவே மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை வழங்கி உதவுமாறு நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணியின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணியில் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்குங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 28, 2016
Rating:

No comments:
Post a Comment