இலங்கையில் ஆறாயிரம் சைவ ஆலயங்கள் காணப்படுகின்றது.....
இந்து சமய கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் இலங்கையில் ஆறாயிரம் சைவ ஆலயங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆறாயிரம் ஆலயங்களும் அறநெறி வகுப்புக்களை நடாத்துவதற்கு முன்வந்தால் நாம் பல முன்னேற்றங்களைக் கண்டிருக்க முடியும் எனவும் ஆனால், பல்வேறு ஆலயங்களில் காணப்படும் நிர்வாகப் பிரச்சினைகள் காரணமாக ஆலயங்களை நடாத்த முடியாததொரு சூழலே தற்போது காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
நாங்கள் இறைவனை விடப் பெரியவர்கள் எனச் சிந்திப்பதே இதற்குக் காரணம்.
ஆலய நிர்வாகங்களிலுள்ள பிரச்சினைக்குரியவர்கள் தொடர்ந்தும் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் எனத் தெரிவித்த யாழ். மாவட்ட அராசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அண்மைக் காலமாக ஆலயங்களில் அதிகரித்து வரும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு அதிகாரமுள்ள சபையொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தெய்வீகச் சேவைத் திட் டத்தின் கீழ் இந்து ஆலயங்கள் மற்றும் வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து இந்து மாணவர் சேவாலயத்தினரது முயற்சியினால் ஒலிப் பதிவு செய்யப்பட்டு இந்து சமய கலாசாரத் திணைக்களத்தினால் வெளியீடு செய்து வைக்கப்பட்ட தெய்வீக இசைஇறுவட்டுக்களின் அறிமுக விழாவும் கலைஞர்களின் கெளரவிப்பு நிகழ்வும் நேற்று (28) இரவு-07 மணி முதல் 10 மணி வரை நல்லூர் மயிலூரான் மண்டபத்தில் திணைக்களப் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதற்காக ஆலயங்கள் உருவாக்கம் பெற்றனவோ அந்த நோக்கத்தை நாங்கள் சிறந்த முறையில் பேணுவதுடன், ஏனையவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் ஆலயங்களை மாற்றியமைக்க வேண்டிய தேவையிருக்கிறது.
ஆலய நிர்வாகங்களில் அங்கம் வகிப்பவர்கள் மிகவும் தெய்வீகத் தன்மை பொருந்திய பண்புள்ளவர்களாகவும், ஏனையோரை மதிக்கின்றவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் திகழ வேண்டும்.
சமூகப் பணிகளில் அதிகமாக ஈடுபட்டு வருவதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழைத் துர்க்காதேவி ஆலயத்தைக் குறிப்பிட முடியும். இந்த ஆலயம் எமது மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களுக்கும் ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
சமயப் பணியில் ஈடுபட்டு வரும் ஆலயங்கள் சிறிதளவாவது சமூகப் பணியில் ஈடுபட முன்வர வேண்டும். குறிப்பாக வறிய மாணவர்களின் கல்விக்கு உதவி புரிய வேண்டும்.
இவ்வாறான நிலை உருவாகும் போது தான் மக்கள் மத்தியில் சமயம் மீதான நம்பிக்கையும், பற்றும் வளரும். ஒவ்வொரு ஆலயங்களும் இது குறித்துச் சிந்திக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் ஆலய சூழலில் சமூகத்திற்கும், சமயத்திற்கும் நன்மை பயக்கும் வகையிலான கருத்தரங்குகளையும், கலைநிகழ்வுகளையும் நடாத்துவதற்கும் ஆலய நிர்வாகங்கள் முன்வர வேண்டும்.
ஆலய நிர்வாகங்கள் ஏனையவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பதன் மூலம் அனைவரும் அதனைப் பின்பற்றுவதற்கான நல்லதொரு முன்னுதாரணமான சூழலை ஏற்படுத்த முடியும்.
எமது சமயத்திற்கும், சமூகத்திற்குமிடையில் நீண்ட இடைவெளி காணப்படுகின்றது.
இதனை நாங்கள் குறைப்பதற்கான முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆறாயிரம் சைவ ஆலயங்கள் காணப்படுகின்றது.....
Reviewed by Author
on
August 29, 2016
Rating:

No comments:
Post a Comment