வடக்கின் முதலமைச்சருடன் சம்பந்தர் இணைய வேண்டும்
அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் முன்னேற் பாடாக வெளிவந்த இடைக்கால வரைபில் தமிழ் மக்களுக்குத் தேவையான அத்தனை உரிமைகளும் அதிகாரங்களும் உண்டு என்ற கருத்து நிலையை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கொண்டிருந்தார். இதுபற்றி அவர் பல இடங்களில் கூறியும் உள்ளார்.
அவரைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலுக்கு வருமாக இருந்தால், இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட்டு விடும் என்பதாக அவரின் நிலைப்பாடு உள்ளது.
சமஷ்டி என்ற சொற்பதம் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் சமஷ்டிக்குரிய அதிகாரங்களும் உரிமைகளும் அரசியலமைப்புச் சீர் திருத்தத்தில் உள்ளது என்பது அவரின் நம்பிக்கை.
இந்நிலையில் இடைக்கால வரைபில் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களும் உரிமைகளும் இல்லை. தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைக் காகப் போராட வேண்டியவர்களாக உள்ளனர் என்று வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் அவர்கள் கருத்துரைக்க அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகமும் இடைக்கால வரைபை நிராகரித்து அறிக்கை விடுத்தன.
நிலைமை இதுவாக இருக்கையில், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் இடைக்கால வரைபில் ஐயம் வெளியிடத் தலைப்பட்டுள்ளமையை உணர முடிகின்றது.
அண்மையில் மன்னார் மறை மாவட்ட ஆயரைச் சந்தித்து தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
இவ்வாறு அவர் மன்னார் ஆயரிடம் தெரிவித்த கருத்தை இந்து மதத் தலைவர்களிடம் தெரிவிக்காதது ஏன்? இரா.சம்பந்தர் இந்து சமயத்தை ஓரங்கட்டுகிறாரா என்ற கேள்விகள் இந்து மத அமைப்புக்களிடம் எழுந்தன.
அதேநேரம் மன்னார் மறை மாவட்ட ஆயரிடம் கூறிய கருத்தை யாழ்.மறை மாவட்ட ஆயரி டம் கூறியிருக்க வேண்டுமல்லவா? அதைச் சம்பந்தர் செய்யாதது ஏன்? என்ற வாதங் களும் அரசியல் பரப்பில் எழுந்ததுண்டு.
எதுஎவ்வாறாக இருப்பினும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கடந்த சில நாட்களாகக் கூறிவரும் கருத்துக்கள் நியாயமானவையாக இருக்கின்றன.
அதிலும் பிரிட்டிஷ் அமைச்சருடனான சந் திப்பின் போது இரா.சம்பந்தர் அவர்கள் கூறிய கருத்துக்கள் ஏற்புடையவை - நியாயமானவை.
ஆக, அடிப்படையில் தமிழ் மக்களின் உரிமை மற்றும் அதிகார விடயங்களில் இரா. சம்பந்தரின் நிலைப்பாடு சரியாக இருக்கின்ற போதிலும் இடையிடையே யாரோ மூளை சலவை செய்து குழப்பி விடுகின்றனர்.
இவ்வாறான குழப்பங்களில் இருந்து அவர் விடுபட்டு தமிழ் மக்களுக்கு உரிய தீர்வைப்பெற முயற்சி செய்ய வேண்டுமாக இருந்தால், அதற்கான ஒரே வழி வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் இரா. சம்பந்தர் இணைந்து செயற்பட வேண்டும்.
-நன்றி-வலம்புரி-
வடக்கின் முதலமைச்சருடன் சம்பந்தர் இணைய வேண்டும்
Reviewed by Author
on
October 10, 2017
Rating:
Reviewed by Author
on
October 10, 2017
Rating:


No comments:
Post a Comment