எல்லைப் பாதுகாப்பில் தீவிரம் காட்டும் அவுஸ்திரேலியா!
வியாட்நாமிலிருந்து புகலிட கோரிக்கையாளர்களை அழைத்து வந்ததாக சொல்லப்படும் ஆட்கடத்தல் படகு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை நெருங்கிய சம்பவத்தை, எல்லையோர கண்காணிப்பில் ஏற்பட்ட தோல்வியாக பார்க்கின்றது அவுஸ்திரேலிய அரசு.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், இப்படகு முதலைகள் நிரம்பிய டைன்ட்ரீ ஆற்று வாயிலருகே இருந்ததை எல்லைப்படை அதிகாரிகள் கண்டுள்ளனர்.
இது புகலிட கோரிக்கையாளர்களை அழைத்து வந்த படகா? அல்லது வெளிநாட்டு மீனவப்படகா? என்பதை கண்டறிய சுற்றுவட்டார பகுதிகளை எல்லைப்படையினர் பரிசோதித்துள்ளனர்.
அப்போது மாங்கிரோவ் புதர்களில் மறைந்திருந்த 17 வியாட்நாமியர்கள் சிக்கினர். பின்னர், அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சித்தவர்கள் எனக் கூறப்பட்டது.
இதனை ஆட்கடத்தல் முயற்சி என்ற அவுஸ்திரேலிய அரசு, அவர்களை மீண்டும் வியாட்நாமுக்கே நாடுகடத்தியது.
கடந்த 2013 முதல் கடுமையான எல்லைக்கட்டுப்பாட்டு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, அந்த கட்டுப்பாட்டின் கீழ் புகலிட கோரிக்கையாளர்கள் வந்த 33 படகுகளை திருப்பி அனுப்பியுள்ளது.
தற்போது வந்த வியாட்நாமிய படகு, கடந்த 1400 நாட்களில் அவுஸ்திரேலிய பகுதிக்குள் நுழைந்த முதல் படகு எனக்கூறும் அவுஸ்திரேலியா, இதனை ஆட்கடத்தல்காரர்கள் தங்கள் வியாபாரத்துக்கான சாதகமான அம்சமாக பிரச்சாரம் செய்யக்கூடும் என அஞ்சுகின்றது.
இதனை சுட்டிக்காட்டும் விதமாக பேசியுள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், “ஆகஸ்ட் மாத இறுதியில் வந்த வியாட்நாமிய ஆட்கடத்தல் படகு “ஆட்கடத்தல் அச்சுறுத்தல்” இன்னும் நீங்கவில்லை என்பதை நினைவூட்டுகிறது” எனப் பேசியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, அவுஸ்திரேலிய எல்லைப்படை அதிகாரிகளுடன் கடல்படை மற்றும் விமானப்படையும் இணைந்து அவுஸ்திரேலிய கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பில் தீவிரம் காட்டும் அவுஸ்திரேலியா!
Reviewed by Author
on
September 17, 2018
Rating:

No comments:
Post a Comment