600 தாலிபான்களை ஒரே நாளில் போட்டுத்தள்ளிய பஞ்ஷிர் போராளிகள்; 1000 பேர் சிறைபிடிப்பு!
சோவியத் யூனியனின் ஊடுருவலை முறியடித்தவரும், தாலிபான் எதிர்ப்பு போராளியுமான அகமது ஷா மசூத்தின் மகன் தான் அகமது மசூத். இவரின் தலைமையின் கீழ் தான் தற்போது தாலிபான்களுக்கு எதிரான போரை எதிர்ப்புப் படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியே காபுலை கைப்பற்றினாலும் ஆப்கனில் ஆட்சி அமைப்பதை தாலிபான்கள் ஒத்திவைத்துள்ளனர். இதற்கு பஞ்ஷிர் போராளிகளின் எதிர்ப்பும் ஒரு முக்கிய காரணம் என்று பேசப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பஞ்ஷிர் மாகாணத்தை கைப்பற்றும் வகையில் தாலிபான்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். இருப்பினும் மண்ணிண் மைந்தர்களான பஞ்ஷிர்வாசிகளின் உத்வேகம் குறையாத போராட்டமும், அந்த பகுதியின் மலைப்பாங்கான அமைப்பும் அவர்களுக்கு கைகொடுப்பதால் தாலிபான்களின் ஊடுருவல் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த 2 நாட்களாக பல்வேறு மாகாணங்களில் இருந்தும் படைகளை குவித்த தாலிபான்கள் தற்போது பஞ்ஷிர் போராளிகளுக்கு கடுமையான சவால் அளித்து போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தாலிபான்களின் கை சற்று ஓங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதே நேரத்தில் நேற்று (செப் 4) காலை முதல் நடைபெற்று வரும் போரில் சுமார் 600 தாலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், சரணடைந்தவர்கள் உட்பட 1000 தாலிபான்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகவும் பஞ்ஷிர் போராளிகளின் செய்தித்தொடர்பாளரான ஃபகிம் தஷ்தி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், பஞ்ஷிர் மாகாணத்தின் 7 மாவட்டங்களில் 4ஐ கைப்பற்றிவிட்டதாக தாலிபான் செய்தித்தொடர்பாளர் பிலால் கரிமி தெரிவித்திருக்கிறார்.
பஞ்ஷிர் போராளிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அந்த பகுதியை பொருளாதார ரீதியில் முடக்கி வைத்திருக்கின்றனர் தாலிபான்கள். அங்கு மின்சாரமும், உணவு சப்ளையும் துண்டித்து வைக்கப்பட்டிருப்பதால் பஞ்ஷிர் போராளிகளின் எதிர்ப்பு இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்ற கேள்விக்குறி ஏற்பட்டிருக்கிறது.
உலக நாடுகள் பஞ்ஷிரிகளுக்கு உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கையும் வைத்திருக்கின்றனர்.
600 தாலிபான்களை ஒரே நாளில் போட்டுத்தள்ளிய பஞ்ஷிர் போராளிகள்; 1000 பேர் சிறைபிடிப்பு!
Reviewed by Author
on
September 05, 2021
Rating:

No comments:
Post a Comment