தாய், மகளை கத்தியால் குத்திவிட்டு 'ஹபாயா“ அணிந்து பெண் வேடமிட்டு தப்பிக்க முயன்றவர் கைது
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்ச நகர் பகுதியில் தாய் மற்றும் மகளை கத்தியால் தாக்கிவிட்டு, பெண் வேடமிட்டு தப்பிக்க முயன்ற நபரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.
மூதூரை பிறப்பிடமாகவும் ஈச்ச நகர் பகுதியில் திருமணம் முடித்து வசித்து வரும் 38 வயதுடைய குடும்பஸ்தரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த தாய் (வயது 54) மட்டக்களப்பு பொது வைத்தியசாலையிலும் மகள் (வயது 31) கந்தளாய் தள வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கத்திக்குத்துக்குள்ளான தாயிடம் கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் கடனுக்கு பணம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கொடுத்த பணத்தை மீளப் பெறுவதற்காக தாக்குதல் தாரியின் கையடக்க தொலைபேசி திருத்தும் கடைக்கு கத்திக்குள்ளான தாய் சென்று கேட்டுள்ளார்.
அதன் பின்னரே சந்தேக நபர் அத்தாயின் வீட்டுக்குச் சென்று கத்திக் குத்து தாக்குதலை நடத்தியுள்ளார்.
தாக்கிய நபர், அங்கிருந்த தப்பிச் செல்வதற்காக முகத்தை மூடி ஹபாயா அணிந்து வெளியே செல்ல முயற்சித்த வேளையிலேயே, சம்பவ இடத்துக்கு விரைந்த தம்பலகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Reviewed by Author
on
June 27, 2024
Rating:


No comments:
Post a Comment