ஆனைக் கோட்டையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன
பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப்பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், 20ஆம் திகதி வியாழக்கிழமை அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இலங்கையின் பெருங்கற்கால பண்பாடுகள் நிறைந்ததாகக் கருதப்படும் ஆனைக்கோட்டையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு பகுதியில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர்களான இரகுபதி மற்றும் இந்திரபாலா ஆகியோர் 1980ஆம் ஆண்டுகளில் முன்னெடுத்த அகழ்வாய்வு மற்றும் மேலாய்வுகளில் இது பெருங்கற்கால பண்பாடு என உறுதிப்படுத்தும் வகையில் சான்றுப் பொருட்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.
இந்த நிலையில் புலம்பெயர் நிதிப்பங்களிப்புடன் யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், தென்னிலங்கை தொல்லியல்துறை பேராசிரியர்கள், யாழ். பல்கலைக்கழக தொல்லியல்துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் பணிமனை அதிகாரிகள், யாழ்ப்பாண மரபுரிமை மையம் இந்த அகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளனர்.
இதன் ஆரம்ப நிகழ்வு 20ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தெரிவித்தார்.
Reviewed by Author
on
June 19, 2024
Rating:


No comments:
Post a Comment