உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு விவகாரம்: தகாத உறவில் பிறந்ததால் கொலை?
நுவரெலியா - அக்கரப்பத்தனை, ஹென்போல்ட் ஜி.எல்பிரிவில் உள்ள தோட்டத்தொழிலாளர் வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின்புறம் பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் பெண் சிசுவின் சடலம் நேற்று பொலிஸாரால் மீட்கக்பட்டது.
இதுதொடர்பில், சிறுமியின் தாயும் முச்சக்கரவண்டியின் சாரதியும் அக்கரபத்தனை பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (10) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சிசுவின் தாயார் 24 வயதான திருமணமாகாத பெண் எனவும், இவர் முச்சக்கரவண்டி சாரதியுடன் (28) தொடர்பு வைத்திருந்தவர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
முச்சக்கரவண்டி சாரதி திருமணமானவர் என்றும் அவர், ஒரு பிள்ளையின் தந்தையாவார் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிசுவை பிரசவித்த சந்தேகநபரான அந்த பெண், சந்தேகநபரான முச்சக்கரவண்டி சாரதியின் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கிறார். அவர் மாவனெல்ல பிரதேசத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
சந்தேகநபரான முச்சக்கரவண்டியின் சாரதி, தனது சகோதரனுடைய முச்சக்கரவண்டியில் மாவனல்லை பிரதேசத்திற்குச் சென்று அவரை அக்கரப்பத்தனை தோட்டத்துக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிசு யு.எஸ்.பி கேபிள் மூலம் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்து சில நாட்கள்தான் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதியின் முச்சக்கரவண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த முச்சக்கரவண்டி சாரதியின் தாய், முச்சக்கரவண்டியின் பின்பகுதியை சோதித்த போது பொலித்தீன் பையில் சிசு சடலமாக கிடந்ததை கண்டுள்ளார்.
முச்சக்கர வண்டியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் சடலம் தொடர்பில் நுவரெலியா பதில் நீதவான் விஜேவிக்கிரமவினால் நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்குமாறு அக்கரபத்தனை பொலிஸாருக்கு பணித்துதமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment