அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை சீருடையை வழங்கிய சீனா!

 2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கும் சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தின் உதவித்திட்டமாக கிடைக்கப்பெற்ற இந்த பாடசாலை சீருடைகளை சீனத் தூதுவர் Key Zheng Hong இன்று (10) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்காக 11,817 மில்லியன் மீற்றர் துணி தேவையாகவுள்ளதுடன், பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 4,640,086 ஆகும். அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையும் (100%) சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சீருடை துணிகள் மூன்று தொகுதிகளாக இலங்கையை வந்தடையவுள்ளதுடன், முதலாவது மற்றும் இரண்டாவது தொகுதிகள் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மூன்றாவது தொகுதி டிசம்பர் 25 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

கல்வி எமது நாட்டிற்கு மிகவும் முக்கியமானது, எமது அரசாங்கம் கல்விக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. நாம் அபிவிருத்தி அடைய கல்வி ஒரு அடிப்படை வழிமுறையாகும்.    எந்தவொரு சமூக-பொருளாதார வேறுபாடு அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து பிள்ளைகளும் கண்ணியத்துடன் கல்வியை அணுக கல்வியில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். அதற்கான பல முன்மொழிவுகளை நாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ளோம்.

பாடசாலை சீருடைக்கான பொருட்களை வழங்குவதில் சீனாவின் பெருந்தன்மை எங்களுக்கு மிகவும் முக்கியமானது,  இல்லாவிட்டால் இதற்கான நிதியை நாங்கள் தேட வேண்டியிருக்கும். 2025 ஆம் ஆண்டில், நமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் சீருடை வழங்கும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது. இது சீனாவிடமிருந்து கிடைக்கும் முக்கியமான நன்கொடை என்றும், இதற்கு அரசாங்கம் நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, தூதரக அதிகாரிகள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



பாடசாலை சீருடையை வழங்கிய சீனா! Reviewed by Author on December 10, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.