வடக்கிலும் மலையகத்திலும் ‘மலையக தியாகிகள் தினம்’ அனுஷ்டிப்பு
மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவுகூறும் ‘மலையக தியாகிகள் தினம்’ வடக்கிலும் மலையகத்திலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் கொட்டகலை கொமர்ஷல் லேக் பிரதேசத்தில் மலையக தியாகிகள் தின நிகழ்வு இடம்பெற்றது.
1940 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்தின்போது முல்லோயா தோட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் பொலிஸ் சார்ஜன்ட் சுரவீரவின் துப்பாக்கி தோட்டாக்களால் கொல்லப்பட்டார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்த ஜனவரி 10 ஆம் திகதியை, மலையக தியாகிகள் தினமாக நினைவுகூறுவதற்கு கடந்த 2019 டிசம்பர் 15ஆம் திகதி தலவாக்கலை, டெவோனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
மலையக உரிமைக்குரல் அமைப்பு மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த தீர்மானத்தையும் நிறைவேற்றியிருந்தன.
கொட்டகலை கொமர்ஷல் லேக் பகுதியில் இந்த ஆண்டு நினைவேந்தல் பிடி தளராதே அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மலையக தியாகிகள் தினம், கடந்த 2020 மஸ்கெலியாவிலும், 2021 பத்தனை சந்தியிலும், 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் கொட்டகலை கொமர்ஷல் லேக் பகுதியிலும் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை, மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவுகூறும் ‘மலையக தியாகிகள் தினம்’ யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நினைவு கூர்ந்துள்ளது
Reviewed by Author
on
January 11, 2025
Rating:




No comments:
Post a Comment