மன்னார் நகர சபையின் விசேட கூட்டம்- 08 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை-பல்வேறு விடையங்களுக்கு சபை அனுமதி
மன்னார் நகர சபையின் விசேட கூட்டமானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) காலை 10 மணியளவில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் இடம் பெற்ற நிலையில் 8 உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையில் ஏனைய 8 உறுப்பினர்களுடன் குறித்த கூட்டம் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்தில் காசோலையில் முதலாவது மற்றும் இரண்டாவது கையொப்பமிடுதலுக்கான அனுமதி,ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அனுமதிக்கப்பட்ட வேலைத்திட்டத்தினை சனசமூக நிலையத்திற்கு ஒப்பந்தம் வழங்கி நிறைவேற்றுவதற்கான சபையின் அனுமதி ,சபை நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள நகர மண்டப மின்ணினைப்புக்கான மின்மாற்றி அறையினை அமைப்பதற்கு சனசமூக நிலையத்திற்கு ஒப்பந்தம் வழங்கி மேற்கொள்வதற்கான சபையின் அனுமதி,நகர சபையில் கடமையாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் நிரந்தர அலுவலர்கள் சம்பளத்தை வழங்குவதற்கும்,நிரந்தர அலுவலர்களின் சம்பளத்தில் 20 வீதத்தினை சபை நிதியில் வழங்குவதற்கும் சபையில் தவிசாளரினால் அனுமதி கோரப்பட்டது.
இதன் போது சபையில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் குறித்த நான்கு விடையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
மன்னார் நகர சபையில் 16 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் நிலையில் 08 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment