இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் குழு கைது
விசா நிபந்தனைகளை மீறி இந்நாட்டில் தங்கியிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்ட வெளிநாட்டு சந்தேக நபர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 41 வெளிநாட்டு ஆண் சந்தேக நபர்களும் 33 பெண் சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (06) மாலை கொள்ளுப்பிட்டி, உத்தரானந்த மாவத்தை பகுதியிலுள்ள வீட்டுத் தொகுதி ஒன்றில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 39 வயதுக்குட்பட்ட வியட்நாம் நாட்டவர்கள் எனவும், இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மேலும் 05 வெளிநாட்டு ஆண் சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் மாத்தறை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்லுபடியாகும் விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்து நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக நேற்று (06) மாலை கந்தர, தலல்ல பகுதியிலுள்ள விடுதியொன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலா விசா மூலம் வியாபாரத்தில் ஈடுபட்டமை மற்றும் தீர்வையற்ற முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றங்களையும் இந்த சந்தேக நபர்கள் புரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Reviewed by Vijithan
on
May 07, 2026
Rating:


No comments:
Post a Comment