அண்மைய செய்திகள்

recent
-

வாசிப்பை நேசிப்தால் நமது அறிவை அகலப்படுத்த முடியும் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்


முக்கிய விடயங்களைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்த சில குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் வாசிப்பின் முக்கியத்துவத்தை, அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு மாதமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சியால், தொலைத்தொடர்புச் சாதனங்களின் வரையறையற்ற பயன்பாட்டால் இன்று வாசிப்புப் பண்பாடு அருகிவருகின்றமை பற்றி நாம் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
வாசிப்பதை நேசிப்பதால்தான் நாம் நமது அறிவை அகலப்படுத்த முடியும் என அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.
  கடந்த 29ஆம் திகதி (29.11.2012) வியாழக்கிழமை மன்னார் நகரமண்டபத்தில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய நிறைவுநாள் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றும்போதே மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், கலையருவி நிறுவனத்தின் இயக்குனருமாகிய அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது,
  வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும் என்பது உண்மை. உலகில் புகழ்பெற்ற மனிதர்கள் எல்லோருமே வாசிப்பை நேசித்தவர்கள்தான். வாசிப்பினால் உயர்ந்தவர்கள் உலகில் ஏராளம். அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பாடசாலையிலோ பல்கலைக்கழகத்திலோ கல்விகற்றவர் அல்ல. ஒரு ஆசிரியரிடம் எட்டு மாதங்கள்தான் படித்தார். சுயமாக நூல்களை வாசித்தே தன் அறிவை வளர்த்துக்கொண்டார். ஒரு மனிதன் அறிந்துகொள்ளவேண்டிய விடயங்கள் புத்தகத்தில்தான் இருக்கின்றன என்று அவர் அடிக்கடி கூறுவார். அதுமட்டுமல்ல நூல்களை வாசிப்பவர்களை, நூல்களோடு இறுக்கமான தொடர்புள்ளவர்களை, அறிவை தேடிச் செல்பவர்களை அவர் நேசித்தார். அப்படிப்பட்டவர்களை அவர் தனது நண்பர்களாகவும் ஆக்கிக்கொண்டார்.
  தொழில்நுட்ப வளர்ச்சி, இலத்திரனியல் ஊடகங்களின் வருகை வாசிப்பை குறைத்துவிட்டது என்பது உண்மையே. அதேவேளை இன்று இணையத்தளங்களுக்குள் சென்று வாசிக்கின்றவர்களின்  தொகை அதிகரித்து வருகின்றது. எனவே வாசிப்பு குறைந்துவிட்டது என்பதைவிட வாசிப்பு முறைமை மாறிவிட்டது என்பதே சரியாகும். அதாவது அச்சுச் சாதனங்களான நூல்கள், பத்திரிகைகளை வாசிக்கும் முறையிலிருந்து இலத்திரனியல் சாதனங்கள் ஊடாக வாசிக்கும் முறைக்கு மக்கள் மாறிவருகின்றார்கள். இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
  வாசிப்பு ஒரு கலை. அதைக் கற்றுக்கொண்டால் நமது அறிவுப் பரப்பு விசாலமடையும். நமது ஆழுமை விருத்தியடையும். தேடலோடு கூடிய வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும்.
வாசிப்பை நேசிப்தால் நமது அறிவை அகலப்படுத்த முடியும் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் Reviewed by NEWMANNAR on November 30, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.