தாக்குதல் நடத்தியோர் புலனாய்வாளர்களே: சரவணபவன் எம்.பி.
'உதயன்' பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அணிந்திருந்த ஆடைகள், தாக்குதல் நடத்திய விதம் என்பவற்றைப் பார்க்கும்போது அவர்கள் இராணுவப் புலனாய்வாளர்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
அரசுக்குத் தெரியாமல் அல்லது அரசின் அனுமதி இல்லாமல் இவ்வாறான அராஜகங்கள் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'உதயன்' பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடக்கில் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் துணிவுடன் செய்திகளாக வெளியிடும் உதயன் பத்திரிகையை முடக்கும் நோக்குடன் சிலர் கடந்த காலங்களில் இருந்து பல்வேறு வடிவங்களில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் எமது ஊடகவியாளர்கள், பணியாளர்கள் பலர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். எனினும், உதயன் எதற்கும் அடிபணியவில்லை.
இந்நிலையில் உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியை முடக்கும் நோக்குடன் அண்மைக் காலமாக சிலரினால் தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விநியோகப் பணியாளர்கள் நடுவீதியில் வைத்து கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருந்தனர். பத்திரிகைகள் நடுவீதியில் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் நேற்று அதிகாலை உதயனின் கிளிநொச்சி அலுவலகம் மீது கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. எமது விநியோகப் பணியாளர்களைக் காயப்படுத்தியுள்ளது.
கறுப்புத் துணியினால் தமது முகத்தை மறைத்துக்கொண்டு தாக்குதல் நடத்தியவர்கள் அணிந்திருந்த அரைக் காற்சட்டைகள், தாக்குதல் நடத்திய விதம் என்பவற்றைப் பார்க்கும்போது அவர்கள் இராணுவப் புலனாய்வாளர்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கில் 24 மணிநேரமும் இராணுவத்தின் ஆட்சி இடம்பெறுகின்றது. இந்நிலையில், இராணுவத்தின் துணை இல்லாமல் அல்லது அரசுக்குத் தெரியாமல் அல்லது அரசின் அனுமதி இல்லாமல் இவ்வாறான அராஜகங்கள் இடம்பெற வாய்ப்பில்லை' என்றார் சரவணபவன்.
தாக்குதல் நடத்தியோர் புலனாய்வாளர்களே: சரவணபவன் எம்.பி.
Reviewed by Admin
on
April 04, 2013
Rating:

No comments:
Post a Comment