முல்லைத்தீவு இளைஞர்கள் இருவரை பலியெடுக்க முயற்சி: நால்வர் கைது
முல்லைத்தீவைச்சேர்ந்த இளைஞர்கள் இருவரை பலியெடுப்பதற்காக மத்துகம பெலவத்த எனுமிடத்திற்கு அழைத்து கொண்டுசென்றபோது அவ்விருவரையும் மீட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நால்வரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மீஹாதென்ன பொலிஸாரே இந்த நால்வரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்பாகவே பணயக்கைதிகளாக களுத்துறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பிவைக்கப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கவேண்டிய 16 இலட்சம் ரூபா கிடைக்கும் வரையில் அந்த இளைஞர்கள் இருவரும் களுத்துறை பயாகல பிரதேசத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
16 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொடுக்காவிடின் அவ்விருவரையும் கொலை செய்வதற்கு பாதாள உலக கோஷ்டியினருக்கு ஒன்றரை இலட்சம் ரூபா வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த பணம் கிடைக்காமையினால் அவர்கள் இருவரையும் கொலைசெய்வதற்கு மத்துகம பெலவத்தைக்கு கொண்டுசென்றுக்கொண்டிருந்த போது வீதி ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் குழு அவர்களை விசாரித்தமையினால் இருவரும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு இளைஞர்கள் இருவரை பலியெடுக்க முயற்சி: நால்வர் கைது
Reviewed by NEWMANNAR
on
July 04, 2013
Rating:

No comments:
Post a Comment