ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் ஏமாற்றுவித்தை: சுரேஷ் பிரேமச்சந்திரன்
இந்த ஆணைக்குழுவினை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஆணைக்குழுவானது வெறும் ஏமாற்று வித்தையாகும். இதனை ஒருவீதத்திற்குக் கூட நம்பமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யுத்த காலத்தில் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கென மூவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினை ஜனாதிபதி மஹிந்தராஜபக்.ஷ நியமித்துள்ளார். இது தொடர்பில் கூட்டமைப்பின் கருத்து குறித்து கேட்டபோதே சுரேஷ்பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் 25 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை வருகின்றார். நவம்பர் மாதத்தில் பொதுநலவாய உச்சிமாநாடு இலங்கையில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு உலகத் தலைவர்கள் வருகை தரவுள்ளனர். நவநீதம் பிள்ளையையும் உலகத் தலைவர்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்காகவே காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்கையில் அமைச்சரவையின் பேச்சாளர் கெஹெலியரம்புக்வெல காணாமல் போனோர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முற்றுமுழுதாக மறுக்கின்றது. ஆனாலும் ஒரு சில குழுவினர் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை சுமத்திவருவதனால் இவ்விடயம் குறித்து ஆராய ஆணைக்குழுவினை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தங்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில் பிள்ளைகளும் மனைவிமார் முன்னிலையில் கணவன்மார்களுமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்தவர்கள் இன்று காணாமல் போயுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது உள்ளது. இதனைவிட யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் பெருமளவானோர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். இது குறித்தெல்லாம் தெரியாத அமைச்சரவைப் பேச்சாளர் விதண்டாவாதம் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களும் மனைவிமார்களும் காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு அழுது புலம்பி கோரிக்கை விடுத்திருந்தனர். இக்கோரிக்கையை அடுத்து காணாமல் போனோர் தொடர்பில்விசாரணை நடத்துமாறு நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில்சுட்டிக்காட்டியிருந்தது. ஆனாலும் காணாமல் போனோரது உறவினர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கவே இல்லை. இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இது தொடர்பில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பிலும், அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி நவநீதம் பிள்ளை இலங்கை வரவுள்ள நிலையில் -ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. நவநீதம் பிள்ளையையும் உலகத் தலைவர்களையும் ஏமாற்றவே அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவினை ஒரு வீதத்திற்குக்கூட நம்பமுடியாது. அரசாங்கத்தின் இன்னொரு ஏமாற்றும் செயற்பாடு இதுவாகும்.
இராணுவத்தினரிடம் சரணடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மற்றும் யுத்தத்தின் போது காணாமல் போனவர்களை மீட்டுத் தருமாறு போராட்டம் நடத்துவதற்கு காணாமல் போனவர்களை மீட்கும் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் அறியாது அமைச்சரவைப் பேச்சாளர் கருத்துத் தெரிவிப்பது வேடிக்கையான செயற்பாடாகும்.
காணாமல் போனோரது உறவினர்கள் தமது பிள்ளைகளை தேடி வீதி வீதியாக அலைந்து திரிகின்றனர். இந்தநிலையில் ஏமாற்றும் நடவடிக்கையாக அமைக்கப் பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவினை கூட்டமைப்பு ஒரு போதும் ஏற்றுக்கொள் ளப்போவதில்லை.
ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் ஏமாற்றுவித்தை: சுரேஷ் பிரேமச்சந்திரன்
Reviewed by Admin
on
August 17, 2013
Rating:

No comments:
Post a Comment