அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் வீட்டில் அதிரடிச் சோதனை; ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் பொலிஸார் முற்றுகை

கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரும் அ.இ.ம.கா. தலைவருமான ரிஷாத் பதியுதீனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பொலிஸார் கடந்த 12 ஆம் திகதி திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

 அமைச்சர் வசம் உள்ள சொத்து விவரங்கள் குறித்தும் அவரிடம் உள்ள ஆயுதங்கள் குறித்தும் அவர்கள் அங்கிருந்தவர்களிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர். முன்னறிவித்தல் ஏதுமின்றி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கட்சி இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து வடமாகாணத் தேர்தலில் களமிறங்கியுள்ளது. அவரது தம்பி ரிப்கான் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் பொலிஸார் அவரது வவுனியா மற்றும் மன்னார் அலுவலகங்களிலும் சோதனை நடத்தியமை வடமாகாண தேர்தல் களத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

 பொலிஸார் அதிரடி அமைச்சர் ரிஷாத்தின் குடும்பச் சொத்தான புத்தளத்தில் அவரது தாயார் வசித்து வரும் வீடு, வவுனியா மற்றும் மன்னாரில் உள்ள அமைச்சரின் அலுவலகங்கள் மற்றும் தங்குமிடங்கள் என்பவற்றிலேயே பொலிஸார் திடீர் பாய்ச்சல் நடத்தினர்.

 அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் பாய்ந்த பொலிஸார் அங்கு தீவிர சோதனைகளை நடத்தியதுடன் அங்கிருந்தவர்களிடம் துருவித் துருவி விசாரணையும் நடத்தினர். அமைச்சரின் நடமாட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டனர் என்று அமைச்சரின் ஆதரவாளர்கள் கூறினர். அமைச்சரின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கை, மேலதிகமாக யாரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனரா என்ற விவரம், அமைச்சர் அல்லது அவரது உதவியாளர்களிடம் ஆயுதங்கள் ஏதும் உள்ளனவா? போன்ற விவரங்களையும் பொலிஸார் துருவியுள்ளனர்.

 "நீதிமன்ற உத்தரவு ஏதுமின்றியே பொலிஸார் இந்தச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்'' என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
தெரிவித்தார். ஜனாதிபதியிடம் முறையீடு பொலிஸாரின் இந்த அத்துமீறல் குறித்து, தான் உடனடியாக ஜனாதிபதியிடம் முறையிட்டார் என்றும் அதுதொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் தான் விசாரிப்பார் என அவர் உறுதிமொழி அளித்தார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்தச் சோதனை நடவடிக்கை குறித்து ஜனாதிபதிக்கு எந்தத் தகவலும் தெரிந்திருக்கவில்லை என்று அமைச்சர் கூறினார்.

 இதற்கிடையே அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகங்கள் சோதனையிடப்பட்டமையை அவரது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உயர் பீடம் உடனடியாகக் கூடிக் கண்டித்துள்ளது. அமைச்சரைத் தொடர்ந்து அவரது கட்சியினர் மீதும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சமும் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது. காரணம் அண்மையில் கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது பொலிஸ்மா அதிபருக்கு எதிராக அமைச்சர் ரிஷாத் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தமையே இந்தச் சோதனைகளுக்கான காரணம் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

 பள்ளிவாசல் மீது தாக்குதல் இடம்பெற்றபோது பொலிஸார் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் இவ்வாறான செயலற்ற பொலிஸாரை வைத்திருக்கும் பொலிஸ்மா அதிபர் அதற்குப் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பில் அமைச்சருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது. எனினும், இந்தச் சோதனை நடவடிக்கை தொடர்பில் தனக்கு எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.


அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் வீட்டில் அதிரடிச் சோதனை; ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் பொலிஸார் முற்றுகை Reviewed by Admin on August 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.