தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்து தீர்மானம்
வடமாகாண சபைத் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
ஆதரவாளர்கள் மீது பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்து நேற்று இடம்பெற்ற சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வின்போது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
சபையின் தலைவர் . தேவசகாயம்பிள்ளை தலைமையில் சபையின் காலை 10 மணியளவில் ஆரம்பமானபோது அமர்வில் சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஞா . கிஷோர் இத்தீர்மானத்தை முன்மொழிந்தார் . இன்னொரு ஆளுங்கட்சி உறுப்பினரான அ . பாலமயூரன் வழிமொழிந்தார் .
தீர்மானத்தை முன்வைத்து கிஷோர் உரையாற்றும் போது
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் பெருவாரியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்துள்ளனர் .
அபிவிருத்தி மாயைக்காட்டி அடாவடி மூலம் மக்களை ஏமாற்ற முயற்சித்தவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர் . இதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் எமது ஆதரவாளர்களுக்கு பல வழிகளிலும் இம்சை கொடுத்து வருகின்றனர் .
பல இடங்களிலும் தாக்கி வருகின்றனர் . எமது மாகாணசபை உறுப்பினரான பா . கஜதீபன் அவர்களுடன் தீவுப்பகுதி மக்களைச் சந்தித்து நன்றி கூறச்சென்ற போது அவரையும் என்னையும் கற்கள் வீசித்தாக்கினார்கள் .
நாங்கள் மயிரிழையில் தப்பினோம் . அதன் பின்பும் பல ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் . நேற்றும் ஒரு ஆதரவாளர் ஊர்காவற்றுறையில் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இவ்வாறான தேர்தலுக்குப் பின்னான எமது ஆதரவாளர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதுடன் இவ்வாறான கோழைத்தனமான தாக்குதல்கள் மூலம் மக்களின் தேசிய உணர்வை அடாவடியாக அடக்க முடியாது எனவும் தெரிவித்தார் .
பின்னர் பிரேரணை சபையினரின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்து தீர்மானம்
Reviewed by Admin
on
October 23, 2013
Rating:

No comments:
Post a Comment