உயர் தரப் பரீட்சைக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி; விசேட வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை, பரீட்சை தொடர்பான செயலமர்வு, கலந்துரையாடல், கருத்தரங்குகளை நடாத்துதல் மற்றும் மாதிரி வினாப் பத்திரங்களை வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளை தடுக்கும் வகையில், விசேட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சட்டரீதியற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, நாளை முதல் உயர்தர பரீட்சை முடிவடையும் வரையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
உயர்தர பரீட்சையுடன் தொடர்புடைய பிரத்தியேக வகுப்புக்களை நடத்துதல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற செயற்பாடுகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவிற்கு பின்னர், இடம்பெற்றால் அது தொடர்பில் அறிவிக்க முடியுமென அவர் கூறினார்.
பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ, பொலிஸ் தலைமையத்திற்கோ, அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119 என்ற அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்புகொண்டோ அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
பரீட்சைகள் நடைபெறும் நேரத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் குழுவாகவும், தனியாகவும் பல்வேறுபட்ட பகுதிகளுக்கும் சென்று பரீட்சை முறைகேடுகள் இடம்பெறுகின்றனவா? என ஆராயவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை அடுத்த மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகி, ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை இரண்டு 2,96,313 பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
உயர் தரப் பரீட்சைக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி; விசேட வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:

No comments:
Post a Comment