மன்னார் பேருந்து நிலையத்தில் சக தனியார் பேருந்து சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துனருக்கு காலவரையற்ற பணி தடை-
மன்னார் பேருந்து நிலையத்தில் சக தனியார் பேருந்து சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துனருக்கு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் காலவரையற்ற பணி தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த 08.04.2026 அன்று பேசாலை மார்க்கத்தில் சேவையில் ஈடுபட்டு இருந்த மற்றொரு தனியார் பேருந்தின் சாரதியுடன் குறித்த தனியார் பேருந்து நடத்துனர் முரண்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிர பட்டிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு அதிகார சபையால் ஆரம்பிக்கப் பட்ட விசாரணைகளில் குறித்த நடத்துனரின் ஒழுங்கீனமான செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சர்ச்சைக்குரிய நடத்துநருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காலவரையற்ற பணித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில், அவர் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினூடாக வழி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட்ட எந்தவொரு பேருந்திலும் பணியாற்றுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தின் போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரிடையே ஏற்படும் இவ்வாறான ஒழுக்க மீறல்கள், வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகள், மேலதிக கட்டணம் அறவிட படுதல் அல்லது பயணிகள் வேறு ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டால், எவ்வித தயக்கமுமின்றி தகுந்த ஆதாரங்களுடன் பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொளி ஆகியவற்றை 071 9090900 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு பொதுமக்கள் உடனடியாக தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
Reviewed by Vijithan
on
April 15, 2026
Rating:

.jpeg)
.jpeg)




No comments:
Post a Comment