மன்னார் பிரதேச சபை உறுப்பினரின் பதவி நீக்கம் வருத்தமளிக்கின்றது!-உறுப்பினர் என்.செபமாலை பீரிஸ்.
கட்சி பேதங்கள் களைந்து அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு ஒற்றுமையாக இயங்கி வரும் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எம்.எம்.ரிசாபியின் உறுப்புரிமை நீக்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் என். செபமாலை பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் பிரதேச சபையானது 09 உறுப்பனர்களைக் கொண்டு இயங்கும் ஒரு சபையாக இருக்கின்றது. இதன் ஆளுகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 05 உறுப்பினர்களையும், 02 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களையும், 02 ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களையும் கொண்டதாக சிறப்பாக இயங்கி வருகின்றது.
இப்படியாக சபை ஒற்றுமையாக இயங்கிவரும் வேளையில் இம்மாதம் வர்த்தமானியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர் ஏ.எம்.எம். ரிசாபியின் உறுப்பினர் பதவியைக் கட்சியின் மேலிடம் நீக்கம் செய்வதாக அறிவித்தமை எமக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
மக்கள் ஆதரவைப் பெற்று உறுப்பினரான கௌரவ உறுப்பினருக்கு ஏன் இந்தப் பதவி நீக்கம்? மக்களுக்குச் சேவை செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட இளம் உறுப்பினர் கடந்த 3 வருடங்களாக சேவையையே குறிக்கோளாகக் கொண்டு ஒவ்வொரு அமர்விலும் தமது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். என்று சதா குரல் கொடுத்து வந்த இந்த 'மக்கள் சேவையாளனுக்கா' இந்தப் பரிதாப நிலை?
இப்படி மக்களின் ஆதரவைப் பெற்று வந்த உறுப்பினரின் பதவியைக் கட்சி மேலிடம் பறித்தமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனவேதனையும், விரக்தியும் அடைந்து நிற்கின்றேன்.
ஏ.எம்.எம். ரிசாபியின் உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பில் கட்சி மேலிடம் மீள் பரிசீலனை செய்து மக்கள் தொண்டனுக்கு, மக்கள் சேவையாளனுக்கு மீண்டும் அப்பதவியை வழங்குவதற்கு நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் என். செபமாலை பீரிஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபை உறுப்பினரின் பதவி நீக்கம் வருத்தமளிக்கின்றது!-உறுப்பினர் என்.செபமாலை பீரிஸ்.
Reviewed by NEWMANNAR
on
July 22, 2014
Rating:

No comments:
Post a Comment