அண்மைய செய்திகள்

recent
-

தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை விழா

கார்த்திகை பெருநாளாம் தீபத் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கோயில்கள், வீடுகளில் தீபங்கள் ஏற்றப்பட்டு பிரகாசமாக ஜொலிக்கின்றன. இருள் விரட்டி ஒளி பாய்ச்சும் இந்த கார்த்திகை பெருநாள் பல்லாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சைவம், வைணவம், சமணம் என அத்தனையிலும் தீப வழிபாடு முக்கியப்படுகிறது. தென் தமிழகத்தில் 16 வகை தீப வழிபாடுகள் வழக்கில் உள்ளன. இவற்றில் ‘கார்த்திகை தீபமே’ சிறப்பிடம் பிடிக்கிறது. அன்றைக்கு இயற்கையோடு நம்மவர்கள் நெருப்பையும் வணங்கி வந்திருக்கின்றனர்.

அகநானூறு, தொல்காப்பியம், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரத்துடன் பொங்கையாழ்வார், ரகுவம்சத்தில் காளிதாசர், மாணிக்கவாசகர், வள்ளலார், அப்பர் பெருமான், திருமந்திரத்தில் திருமூலர் என பலரும், அத்தனை புராணங்களும் இந்த விளக்கு விழாவைப் பேசுகின்றன. அகல், எண்ணெய், திரி, சுடர் நான்கும் ஒன்றிணையும் போது ‘விளக்கு’ ஆகிறது. இவை அறம், பொருள், வீடு எனும் குறள் நெறியை உணர்த்துகிறது. இந்த அறவொளியே தீப சக்தியாக இந்நாளில் வழங்கப்படுகிறது.

பிரம்மன், விஷ்ணுவிற்கு சிவனே முதல்வரென காட்டியது, முருகப் பெருமானின் பிறந்த தினம், அக்னி - சுவாகா தம்பதியர், சப்தரிஷி மங்கையர் பூஜித்தது, எலியாய் அவதரித்த மகாபலி சக்கரவர்த்தி வரம் பல பெற்றது, திரிசங்கு மன்னன் பகீரதனை வென்றது, பார்வதிக்கு சிவபெருமான் பாதி இடமளித்து அர்த்தநாரீஸ்வரராய் ஆக்கியது, மகிஷாசுரன் வதத்தின் போது சிதிலமடைந்த லிங்கத்தை பார்வதி பூஜித்ததென பல அற்புத நிகழ்வுகள் இந்நாளில்தான் நடந்தேறின.

இன்றும் காசி, ஹரித்துவார் பகுதிகளில் மாலை நேரத்தில் தீபமேற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆற்றில் விடும் வழக்கமிருக்கிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது வழக்கில் உள்ளது. தை மாதம் சபரிமலை ஐயப்பன் சன்னதியில் மகரஜோதி தரிசனம் கேரளத்தில் பிரசித்தம். சிவபெருமான் ஒளிமயமாகக் காட்சி தந்ததை காட்டும் விதம் திருவண்ணாமலை உச்சியில் ஏற்றும் மகாதீபம் அளப்பரியது. ஐந்தரை அடி உயர, அகல இரும்புக் கொப்பரையில் 2 ஆயிரம் கிலோ நெய்யிட்டு முப்பது மீட்டர் காடாத் துணி சுருட்டிச் செய்த திரி போட்டு அதன் மீது 2 கிலோ கற்பூரம் வைத்து ஏற்றுகிற இத்தீபம் 35 கிலோமீட்டர் தூரத்தை வெளிச்சக் காடாக்கி விடும்.

நம்மூர்களில் காலை முதல் விரதமிருந்து மாலையில் பூஜை முடித்து வீடு முழுக்க வரிசையாக அகல் விளக்கேற்றி வைக்கும் அழகு அற்புதமானது. மொட்டை மாடி முதல், சுற்றுச் சுவர்கள் வரை இரவில் தெருக்கள் ஜொலிக்கும். மண் விளக்கு, பித்தளை, சர விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி வழிபடுவதும், மாவிளக்கு ஏற்றுவதும் இந்நாளில் சிறப்பானது. எனினும் கால ஓட்டத்தில் அலங்கார மெழுகு வர்த்திகளுக்குள் அடங்கி விட்டதில் வருத்தம். இருப்பினும், இருள் துரத்தும் இவ்வெளிச்ச தினம் நமக்குள் கொட்டும் குதூகலம் கொஞ்சமும் குறையவில்லை என்பதே உண்மை.

திறந்தவெளியில் பப்பாளி போன்ற மரத்தண்டை நிறுத்தி அதைச் சுற்றி காய்ந்த பனை மட்டைகள் கட்டி வைத்து இந்த ‘சொக்கப்பனை கொளுத்துதல்’ ஒவ்வொரு கிராமத்திலும் இந்நாட்களில் இப்போதும் நடக்கிறது. சொக்கப்பனைக்கு தீபாராதனை காட்டி அதைக் கொளுத்த பனை மட்டையில் படபட ஓசையுடன் பிடித்தெறியும் தீ, இன்றைய பட்டாசுகளை தோற்கடித்து விடும்!
தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை விழா Reviewed by NEWMANNAR on December 05, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.