பாலேந்திரன் விபூஷிகா அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிப்பு
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாலேந்திரன் விபூஷிகா அனைத்து
வழக்குகளில் இருந்தும் கிளிநொச்சி நீதிமன்றத்தினால் இன்று விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு மீதான விசாரணைகள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற போது
அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விபூஷிகா விடுவிக்கப்பட்டு, அவரது தாயாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கு உதவி வழங்கியதாக கூறப்படும்
குற்றச்சாட்டில் பாலேந்திரன் ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் விபூஷிகா ஆகியோர் கடந்த
வருடம் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பாலேந்திரன் ஜெயகுமாரி பூசா முகாமிலும், விபூசிகா கிளிநொச்சி சிறுவர் இல்லமொன்றிலும்
தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த மாத முற்பகுதியில் பாலேந்திரன் ஜெயகுமாரி, பிணையில் விடுவிக்கப்பட்டதை
தொடர்ந்து சிறுவர் இல்லத்தில் இருந்த விபூஷிகாவை அவரது தாயாருடன் இணைக்குமாறு
கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் கிளிநொச்சி நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் விபூஷிகா
சந்தேகநபாரக குறிப்பிடப்பட்டிருந்தமையினால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது
ஜெயக்குமாரி மீதான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் நிலுவையில்
உள்ளதனால் கிளிநொச்சியில் தொடரப்பட்ட வழக்கில் சந்தேகநபாராக குறிப்பிடப்பட்ட
விபூஷிகாவை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்க பயங்கரவாத தடுப்பு பிரிவினர்
ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.
இதனை அடுத்து விபூஷிகா அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் கிளிநொச்சி
நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாலேந்திரன் விபூஷிகா அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிப்பு
Reviewed by NEWMANNAR
on
March 26, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 26, 2015
Rating:


No comments:
Post a Comment