கர்ப்பிணி மனைவிக்கு நஞ்சூட்டிய பின் கணவனும் நஞ்சருந்தி தற்கொலை?
வெள்ளவத்தை 40 ஆவது ஒழுங்கை தனியார் ஹோட்டல் ஒன்றுக்குள் சடலமாக மீட்கப்பட்ட இந்திய தம்பதியர் கெசினோ சூதாட்டத்தில் ஏற்பட்ட பல லட்ச ரூபா நட்டம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மீட்கப்பட்ட குறித்த இந்தியர்கள் இருவரினதும் மரணம் குறித்து வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லரின் கீழ் முன்னெடுக்கப்படும் விஷேட விசாரணைகளிலேயே இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் தமிழ் நாடு சென்னையை சேர்ந்த 28 வயதான (நகொபோயானா) மகாலக் ஷ்மி என்ற 6 மாத கர்ப்பிணியும் அவரது கணவரான 31 வயதுடைய துட்விராம் பொட்தா ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார முட்ளர் தெரிவித்தார். மேலும் அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து கிடைத்த தடயங்களின் படியும் ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளிலும் குறித்த மரணம் தற்கொலை என தெரிய வந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார கேசரிக்கு தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி இந்த தம்பதியினர் சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளனர். அவ்வாறு இலங்கை வந்துள்ள இவர்கள் வெள்ளவத்தை 40ம் ஒழுங்கையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் 4ஆவது மாடியில் அறையெடுத்து தங்கியுள்ளனர். இந்த தம்பதியினர் இரவு நேர களியாட்ட விடுதிகள் கெசினோ விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு காட்டி வந்துள்ள நிலையில் கொள்ளுப்பிட்டியில் உள்ள கெசினோ நிலையம் ஒன்றில் தொடர்ச்சியாக கஸினோ சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். சுற்றுலா விசாவில் இலங்கை வந்த இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கான கட்டணத்தை குறித்த கெசினோ நிலையமே செலுத்தியுள்ள நிலையில் அங்கிருந்து கெசினோ விளையாட்டுக்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளையும் அந்நிலையமே செய்து கொடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை ஹோட்டலில் இருந்து கெசினோ விளையாட சென்ற தம்பதியினர் மீண்டும் அன்றைய தினம் இரவு வேளையில் அறைக்கு திரும்பியுள்ள நிலையில் நேற்று முன்தினம் மாலை வரை அவர்கள் அறையிலிருந்து வெளியே வராத தால் எவ்வித நடமாட்டமும் அவதானிக்கப்படாத நிலையில் சந்தேகம் கொண்ட ஹோட்டல் நிர்வாகம் தம்பதியினர் தங்கியிருந்த அறைகளை சோதனை செய்துள்ளனர். இதன் போது குறித்த தம்பதியினரின் வாயிலிருந்து நுரை தள்ளி விழுந்து கிடப்பதை அவர்கள் அவதானித்துள்ளனர். இதனையடுத்து வெள்ளவத்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்படவே பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்குப் பொறுப்பான பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாகஹவத்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் அங்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன் போது அவர்களது அறையிலிருந்து நஞ்சூட்டப்பட்ட குளிர்பானம் அடங்கியதாக சந்தேகிக்கப்பட்ட போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்றுக்காலை கல்கிசை பிரதான நீதிவான் எம்.எம்.சஹாப்தீன் ஸ்தலத்தை பரிசோதித்ததுடன் களுபோவிலை போதனா வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி சஞ்சீவவும் பரிசோதனைகளை முன்னெடுத்தார். பொலிஸ் தடயவியல் பிரிவினரும் நேற்றைய தினம் விசேட தடையம் சேகரிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன் போது குறித்த இந்திய தம்பதிக்கு சொந்தமான கடவுச் சீட்டுக்கள் பொருட்கள் அந்த அறையில் அப்படியே காணப்பட்ட நிலையில் 6 மாத கர்ப்பிணியான பெண்ணின் உடலில் கழுத்து வரை போர்வை ஒன்றால் போர்த்தப்பட்டிருந்தது. அத்துடன் அவரின் கணவர் அதன் அருகே விழுந்து கிடந்தார். இந்நிலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தற்கொலை செய்து கொண்டமைக்கு கசினோ விளையாட்டில் ஏற்பட்ட பாரிய நிதியிழப்பு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் இந்த மரணங்கள் தற்கொலைதானா ? என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள சட்ட வைத்திய அதிகாரியின் உதவி நாடப்பட்டுள்ளது. அதன்படி களுபோவில போதனா வைத்தியசாலையில் இந்த தம்பதியினரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்காக நேற்று முற்பகல் அவர்களின் சடலங்கள் அங்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்கின்றனர்.
கர்ப்பிணி மனைவிக்கு நஞ்சூட்டிய பின் கணவனும் நஞ்சருந்தி தற்கொலை?
Reviewed by Author
on
April 04, 2015
Rating:
Reviewed by Author
on
April 04, 2015
Rating:


No comments:
Post a Comment