மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி தோண்டும் நடவடிக்கை ஒத்திவைப்பு.-Photos
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் காண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் யூலை மாதம் 06 திகதி வரை மன்னார் நீதவான் அலெக்ஸ்ராஜா ஆசிர்வாதம் இன்று திங்கட்கிழமை(6) ஒத்திவைத்தார்.
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி மற்றும் அப்பகுதியில் காணப்பட்டதாக கூறப்படும் கிணறு ஆகியவற்றை தோண்டுவது தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை (06) மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெற்றது.
இதன் போது மன்றில் முன்னிலையான குறித்த மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு பொறுப்பான குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் காணப்பட்ட இடம் மயானம் என மன்றில் தெரிவித்திருந்தனர்.
இதே வேளை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பகுப்பாய்வு செய்வதற்காக பேராதனிய பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் பகுப்பாய்வு அறிக்கை இது வரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த மனித புதைகுழி காணப்பட்ட இடம் மயானம் என்பதற்கான ஆதாரங்களை மன்னார் பிரதேச சபையூடாக பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதனால் இன்று திங்கட்கிழமை 06 ஆம் திகதி முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த அகழ்வு நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் யூலை மாதம் 06 திகதிக்கு ஒத்தி வைத்தார்.
காணாமல் போனவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான நிரஞ்சன்,ரணிதா,ராஜகுலேந்திரன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி தோண்டும் நடவடிக்கை ஒத்திவைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 06, 2015
Rating:

No comments:
Post a Comment