யாழ். பொங்கல் விழாக்களில் பங்கேற்காமல் நழுவிய கூட்டமைப்பு...
சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டில், நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் நழுவிக் கொண்டுள்ளனர்.
தைப்பொங்கலை முன்னிட்டு, நேற்று சிறிலங்கா அரசாங்கத்தினால் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பலாலி, இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு மற்றும், யாழ். வீரசிங்க மண்டபத்தில் தேசிய பொங்கல் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதில் சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டும் பங்கேற்றார்.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடந்த பொங்கல் வழிபாடுகளில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மட்டும் பங்கு பற்றினார்.
அதேவேளை, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த தேசிய பொங்கல் விழாவில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மட்டும் கலந்து கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ, மாகாணசபை உறுப்பினர்களோ இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் இன்னமும் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்று சிறிலங்கா பிரதமரிடம் வலியுறுத்தவே, பலாலியில் நடந்த பொங்கல் வழிபாடுகளில் தாம் பங்கேற்றதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தாம் பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை என்றும், வழிபாடுகளில் மாத்திரம் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ். பொங்கல் விழாக்களில் பங்கேற்காமல் நழுவிய கூட்டமைப்பு...
Reviewed by Author
on
January 16, 2016
Rating:
Reviewed by Author
on
January 16, 2016
Rating:


No comments:
Post a Comment