சிவகரன் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவார்! பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி உறுதியளிப்பு
தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி உறுதியளித்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
சிவகரனை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட வவுனியா சென்ற போதே இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மன்னாரில் அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு விசாரணைக்கென அழைத்து செல்லப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சிவகரனின் தாய் சிவகரனை நேரில் சென்று பார்வையிட வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு நேரில் சென்றிருந்தனர்.
சிவகரனை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் சிவகரனின் தாய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை ,சிவகரனின் கைதுக்கான காரணம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரியிடம் கேட்டபோது அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை எனவும், சிவகரனின் விடுதலை தொடர்பாக மேலும் கேட்டபோது இன்று சிவகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி உறுதியளித்துள்ளார்.
சிவகரன் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவார்! பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி உறுதியளிப்பு
Reviewed by NEWMANNAR
on
April 28, 2016
Rating:

No comments:
Post a Comment