வவுணதீவு மக்களின் நீர்ப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு...
மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடா, குருந்தையடி ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்ட கிணறுகள் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
மட்டு. மாவட்ட வவுணதீவுப் பிரதேசத்தின் கன்னங்குடா குருந்தியடி காஞ்சிரங்குடா ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக கிணறுகள் மற்றும் நீர் நிலைகளிலுள்ள நீர் வற்றியதனால் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
ஒரு குடம் தண்ணீருக்காக காட்டுப்பகுதிகளினூடாக பல கிலோ மீற்றர் தூரங்களுக்குச் சென்று விஷ ஜந்துக்களிடம் தமது உயிரைப் பணயம் வைத்து தண்ணீரைப் பெற்று வரவேண்டிய நிலை இந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் கிணறுகளுக்குள் நீர் வற்றியுள்ளமை காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று பல தேவைகளை முன்வைத்து மக்கள் தாம் நீருக்காக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கின் வேண்டுகோளுக்கமைவாக அரச சார்பற்ற தனி நபர்கள் மற்றும் சமூக சேவை உள்ளமுடைய அரேபிய நாட்டு தூதுக்குழு உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை நேரடியாக அழைத்துச் சென்று சுட்டிக்காட்டி நீர் வளமுள்ள இடங்களை அடையாளங்கண்டு இரண்டு இடங்களில் இரு கிணறுகள் அமைப்பதற்கு நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு கிணறும் 85,500 ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அதற்கான அடிக்கல்லும் நடப்பட்டு கிணறுகள் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த நிலையில் குறித்த கிணறுகள் அப்பிரதேச மக்களிடம் உத்தியோக பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், JASKA அரேபிய நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் அஷ்ஷேய்க் ஹாஸிம் சூரி, செயலாளர், உறுப்பினர்கள், முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த காலங்கள் போன்று தமிழ் முஸ்லிம் சமூகம் என்று பிரிந்து வாழ்ந்த காலம் போய் இன்று அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடா குருந்தையடி ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்ட கிணறுகள் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன ஒற்றுமை வெறும் வார்த்தைகளோடு நின்று விடாமல் இவ்வாறான செயற்றிட்டங்களூடாக இன மத வேறுபாடுகளின்றி இரு சமூகமும் நல்லதோர் புரிந்துணர்வுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டுமென்பதாகும். எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தினை நழுவ விடாமல் அனைவரும் பற்றிப்பிடித்து பாதுகாக்க வேண்டும்
வவுணதீவு பிரதேச மக்கள் நீரில்லாமல் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அதனை நிவர்த்தி செய்யுமுகமாக நிறுவனத்தினூடாக அதனைத் தீர்த்து வைப்பதற்கு இரண்டு கிணறுகளை நிர்மாணித்து கொடுத்திருக்கின்றோம். இந்நிறுவனத்திற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறான செயற்பாடுகளை நாம் செய்வதன் நோக்கம் ஒரு மனிதன் இன்னுமொரு மனிதன் கஷ்ட நிலையிலிருக்கும் போது அவனுக்குச் செய்கின்ற ஒரு மனிதாபிமான செயற்பாடாகும். அதனடிப்படையில் இன்று நாங்கள் அவ்வாறான மானிதாபிமானச் செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றோம்.
இந்நிறுவனமானது இறைவனின் பெரும் பொருத்தத்தினை மாத்திரம் எதிர்பார்த்து இவ்வாறான செயற்படுகளைச் செய்து கொண்டிருக்கின்றது. எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் இன்னும் பல மனிதாபிமான அபிவிருத்தித் திட்டங்களை நாம் இந்நிறுவனத்தினூடாக முன்னெடுக்க ஆலோசனைகளை செய்து வருகின்றோம் என்றார்.
வவுணதீவு மக்களின் நீர்ப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு...
Reviewed by Author
on
July 29, 2016
Rating:

No comments:
Post a Comment