வடக்கில் தற்போது அமைக்கப்பட்டு வரும் விகாரைகளுக்கு என்ன பதில்? சி.சிறீதரன் எம்.பி
வடக்கில் அமைக்கப்பட்ட விகாரைகளை அகற்ற முடியாது எனக் கூறும் அமைச்சர் தற்போது அமைக்கப்பட்டுவரும் விகாரைகளைத் நிறுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முல்லைத்தீவு - கொக்கிளாய் கருணாட்டுகேணி பிள்ளையார் கோவிலை இடித்துவிட்டு இப்போது விகாரை அமைக்கப்பட்டு வருகிறது.
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் அருகே சுவாமி வீதி வலம் வரும் வீதியை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்தத் தகவல்கள் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அமைச்சர், இவை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் மீண்டும் வந்து “கட்டினால் அகற்ற முடியாது” எனக் கூறுவாரா எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் வந்த அமைச்சர் சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசும்போதே “கட்டிய விகாரைகளை அகற்ற முடியாது”. கட்டும்போது சொன்னால் தடுக்க நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த கருத்து குறித்து கேட்டபோதே சிறீதரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கில் பௌத்தர்களே இல்லாத இடங்களில் விகாரை அமைப்போர் எமக்கும், தமிழ் மக்களுக்கும் சொல்லிவிட்டு அவற்றை அமைப்பதில்லை எனவும் அவர் கூறினார்.
கனகாம்பிகை அம்மன் ஆலயம் அருகே தறப்பாள்கள் கொண்டு கட்டிவிட்டு மிக இரகசியமாகவே இராணுவத்தினர் விகாரையை அமைத்துக் கொண்டிருந்தனர். படையினர் தங்கள் முகாமை இவ்வாறு செய்ததாகவே மக்கள் கருதினார்கள்.
பின்னர் அந்த தறப்பாள் அகற்றப்பட்டு மதில் அமைக்கப்பட்டபோதே அங்கு விகாரை அமைக்கப்பட்டு வருவது தெரியவந்தது. இதனை அமைச்சர் சுவாமிநாதன் நேரில் பார்வையிட்டார். மேலும் பல இடங்களுக்கும் இந்த விடயத்தை நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். ஆனால் நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்படவில்லை எனவும் சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.
வடக்கில் தற்போது அமைக்கப்பட்டு வரும் விகாரைகளுக்கு என்ன பதில்? சி.சிறீதரன் எம்.பி
Reviewed by NEWMANNAR
on
August 25, 2016
Rating:

No comments:
Post a Comment