பேராதனை பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் அவசர கடிதம்....
பேராதனை பல்கலையில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பேராதனை பல்கலைக்கழகக் கல்வி பயிலும் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மாணவர்கள் பலர் தமது பெற்றோருடன் என்னை இன்று காலை எனது வதிவிடத்தில் சந்தித்தனர்.
அவர்கள் எழுத்து மூலமாக எனக்கொரு வேண்டுகோளை முன்வைத்தனர். அதில் அவர்கள் தங்களை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவர்களுக்கு பாதுகாப்பளிப்பது எமது கடமையாகும். தாங்கள் இப்படியான பாதுகாப்பை யாழ்ப்பாணத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளீர்கள்.
அதே போல இத்தமிழ் மாணவர்களுக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கும்படி உங்களுக்கு கோரிக்கை விடுக்கின்றேன்.
இதன் மூலம் தான் அம் மாணவர்களின் பெற்றோரை பேராதனையில் உள்ள பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கல்வி பயில அனுமதிக்குமாறு கோரவும் அவர்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும்.
எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை மீண்டும் அங்கு வகுப்புகள் நடைபெறவிருக்கினற பொழுதிலும் அங்குள்ள சிரேஷ;ட மாணவர்களால் அவர்களுக்கு தீங்கு ஏற்படுமென எண்ணி அவர்களை அங்கு செல்ல அனுமதிப்பதில் விருப்பமற்றிருக்கிறார்கள்.
அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தேவையற்றனவாகவே காணப்படுகின்றன. பொதுவாக முதலாம் ஆண்டு மாணவர்களுடைய ‘கோரிக்கைக் கூட்டங்கள் (Request Meetings) இரவில் தான் நடைபெறுவதுண்டு.
ஆனால் அவை பற்றி அன்றன்றையதினம் காலை 6 மணியளவில் நேரகாலத்தோடு அறிவிக்கப்படுவதுண்டு.
ஆனால் சம்பவம் நடந்த இரு நாட்களிலும் இரவில் மிகவும் தாமதமாக நடுநிசிக்கு அரை மணித்தியாலத்திற்கு முன்பதாகத் தான் அக் கூட்டங்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து முதலாம் வருட மாணவர்களுக்கு எதிராக வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்காகவே இப்படியாகத் தாமதமாக வேண்டுகோள் திட்டமிட்டு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
காயப்பட்ட சிலர் இப்பொழுதும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். தங்களிடமிருந்து ஒரு சாதகமான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
மேற்படி வேண்டுகோள் கடிதத்தின் பிரதிகள் கௌரவ உயர் கல்வி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவுக்கும், பேராசிரியர் உப்புல் பீ. திஸ்ஸநாயக்கா – துணைவேந்தர் அவர்களுக்கும், பேராசிரியர் டி. பி. மகிந்த விக்கிரமரட்ண – பீடாதிபதி அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் அவசர கடிதம்....
Reviewed by Author
on
August 28, 2016
Rating:

No comments:
Post a Comment