சுகாதாரம், கல்வி அபிவிருத்தி தொடர்பாக கனடாவில் மாநாடு - வடக்கு முதலமைச்சர் பங்கேற்பு...
வடகிழக்கு மாகாணங்களின் சுகாதாரம், கல்வி அபிவிருத்தி தொடர்பாக கனடா நாட்டில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கு வடகிழக்கிலிருந்து வடமாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் எதிர்வரும் வாரம் கனடா நாட்டிற்குப் பயணமாகவுள்ளனர்.
எதிர்வரும் 15,16,17ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக வடமாகாணச் சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாணச் சுகாதார அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக மூன்றாண்டு கால மூலோபாயத் திட்டமொன்றை நாங்கள் தயாரித்திருக்கின்றோம்.
இந்த மூன்றாண்டு கால மூலோபாயத் திட்டம் 2016 ஆம் ஆண்டு யூன் மாதம் முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
அந்தத் திட்டத்தை நாங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் எங்களுக்கு மனித வளம், நிதி வளம் என்பன போதுமானளவு காணப்பட வேண்டும்.
அத்துடன் ஆலோசனைகளும் எமக்குத் தேவையாகவிருக்கின்றது. அந்த அடிப்படையில் தான் நாங்கள் இந்த வருடம் ஜனவரி மாதம் 15,16, 17 ஆம் திகதிகளில் கனடாவில் சர்வதேச மாநாடொன்றைக் கூட்டியிருக்கிறோம்.
சுகாதாரம் என்பது தனியே சுகாதாரத் திணைக்களத்தால் மாத்திரம் நடைமுறைக்குக் கொண்டு வரக் கூடிய விடயமல்ல. கல்வித் திணைக்களத்திற்கும் இது தொடர்பான பாரிய பங்களிப்பிருக்கின்றது.
கடந்த கால யுத்த சூழலுக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் மாத்திரமன்றிக் mகிழக்கு மாகாணத்திலும் ஒரே மாதிரியான பிரச்சினைகளே காணப்படுகின்றன.
ஆகவே, இந்த மகாநாடு வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணத்திற்குரியதொரு சுகாதாரம், கல்வி மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச மாநாடாகவே நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த மாநாட்டில் வடக்கு,கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சுகாதாரம், கல்வி அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சுகாதாரம், கல்வி அபிவிருத்தி தொடர்பாக கனடாவில் மாநாடு - வடக்கு முதலமைச்சர் பங்கேற்பு...
Reviewed by Author
on
January 05, 2017
Rating:

No comments:
Post a Comment