தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசையும் பிரித்து பார்ப்பது தவறு: கஜேந்திரகுமார்-Photo
அரசையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிரித்து பார்ப்பதனால் தான் மக்களுக்கு அவர்கள் மீது கோபங்களும் வெறுப்புக்களும் ஏற்படுகிறது என தமிழ்த்தேசிய மக்கள் முன்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்று(30) கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எட்டு வருடங்களாக இந்தப் பிரச்சினையை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த மார்ச் மாதமும் ஐ.நாவால் அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியோடுதான்.
உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் கூட்டமைப்பு அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தால் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருக்க வாய்பிருந்திருக்காது.
எனவே இன்றைக்கு கூட்டமைப்பில் இருக்கின்ற ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டாலும் கூட அவர்கள் தொடர்ந்தும் அந்த தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கும் வரை அந்த தலைமை தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு துணைபோய்க் கொண்டிருக்கும் நிலைமை இருக்கும்.
அவர்கள் தொடர்ந்தும் இந்தத் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கும் வரை அந்த தலைமை செய்யும் பச்சைத் துரோகத்தை இந்த தனிநபர்கள் இங்கு வந்து கலந்துகொண்டிருப்பது அந்த துரோகத்தை மூடி மறைப்பதாகத்தான் இருக்குமே தவிர வேறு எதுவும் கிடையாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசையும் பிரித்து பார்ப்பது தவறு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அரசின் ஒரு அங்கம். அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்று தான் அதுதான் யதார்த்தம், அரசையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிரித்து பார்ப்பதனால்தான் மக்களுக்கு அவர்கள் மீது கோபங்களும் வெறுப்புக்களும் ஏற்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசையும் பிரித்து பார்ப்பது தவறு: கஜேந்திரகுமார்-Photo
Reviewed by NEWMANNAR
on
May 31, 2017
Rating:

No comments:
Post a Comment