வடக்கு முதல்வர், பிரதமர் முன்னிலையில் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை! -
கல்வி தொடர்பில் மாத்திய அரசாங்கத்திடம் காணப்படும் அதிகாரங்கள் மாகாண சபைகளிடம் வழங்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் தொண்டர் ஆசிரியர்களுக்கான இலங்கை ஆசிரியர் சேவைவகுப்பு 3ம் தரத்திற்கு நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“மாகாண சபைகளுக்கான சட்டத்தில் கல்வி என்பது மாகாணசபைகளுக்குப் பகிரப்பட்டவிடயம். இந்த நிலையில் ஆசிரியர் நியமனங்கள் மற்றும் கல்வி தொடர்பான நடைமுறைகள் யாவும் மாகாணசபையின் அதிகாரத்தின் கீழ்க் கொண்டு வரப்படவேண்டும்.
ஆனால் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மட்டுமே மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய வகைகளைச் சேர்ந்த க.பொ.த உயர்தரத்தில் தகைமை பெற்றவர்கள், டிப்ளோமா பட்டம் பெற்றவர்கள் போன்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கக்கூடிய அதிகாரத்தை மத்தி தன்னிடம் வைத்துக்கொண்டுள்ளது.
அந்த அதிகாரமும் மாகாண சபைகளிடமே வழங்கப்பட வேண்டும். வடமாகாணத்தில் செயற்படும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரிகள் என்பனவற்றிற்குப் பயிற்சி ஆசிரியர்களை வடமாகாணத்தின் தேவைக்கேற்ப தெரிவுசெய்யும் அதிகாரம் எம்மிடம் தரப்படவில்லை.
அந்த அதிகாரம் மாகாண சபைகளிடமே இருக்க வேண்டும். இலங்கையில் மாகாணப் பாடசாலைகள், தேசியப்பாடசாலைகள் என்ற இருவகையான பாடசாலை முறைமைகளை அரசாங்கம் அறிமுகம்
தேசியப் பாடசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழும், மாகாணப்பாடசாலைகள் மாகாணசபையின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த நிலையில் மாகாணப் பாடசாலைகளைப் பாதிக்கும் பலசெயற்பாடுகள் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாகாணப் பாடசாலைகளில் கல்வி பயின்று கொண்டிருக்கின்ற மாணவர்களை அதிகளவில் தேசியப் பாடசாலைகளில் அனுமதிப்பதற்காகத் தேசியபாடசாலைகளின் வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், மேலும் தேவைக்கு அதிகமான ஆசிரியர்களை நியமித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் மாகாணத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள் பாதிக்கப்படுகின்றன.
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்றகொள்கைத் திட்டத்தை (NSBS) Nearest School is The Best School நடைமுறைப்படுத்தி விட்டு அருகில் உள்ள பாடசாலைகளைப் பாதிக்கின்ற வகையில் தேசியபாடசாலைகளை வளர்க்கும் போக்குதவறான அணுகுமுறையாகும்.
நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் ஒரே கல்வித்திட்டம் ஒரே வகையிலான கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற பொழுது, சில பெரிய பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாக நியமிப்பது மாகாணப் பாடசாலைகளுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
தேசிய பாடசாலைகளுக்கென வேறுவகையான கல்வித்திட்டம், வேறுவிதமான பாடநூல்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் இருக்குமாயின் விரும்பியவர்கள் அந்தத் திட்டத்தின் கீழ் அத் தேசியக் கல்லூரிகளில் இணையலாம்.
ஆனால் ஒரே வகையான கல்வித்திட்டத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகளிடையே வேறுபாடுகளை வளர்ப்பதால் பெற்றோர் மாணவர்களிடையே குழப்பங்களும் சந்தேகங்களும் ஏற்படுகின்றன.
இவ்வாறான விடயங்களை இங்கு வந்திருக்கும் பிரதமரும் மற்றைய அமைச்சர்களும் கவனத்திற்கு எடுக்க வேண்டும்.
மாகாணசபைகளின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கு அமைவாக கல்வி தொடர்பான முழுமையான செயற்பாடுகள் மத்திய அரசினால் தலையிடப்பட முடியாத விதத்தில் மாகாணசபை நிர்வாகத்தின் கீழ்க் கொண்டு வரப்படவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு முதல்வர், பிரதமர் முன்னிலையில் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை! -
Reviewed by Author
on
July 23, 2018
Rating:

No comments:
Post a Comment