'நாம் தமிழர்' வாக்குவங்கி 1.07 TO 3.87%... அதிகரித்தது எப்படி?
குறைந்த வாக்குகள் வாங்கிய பகுதிகளில் அடுத்து கூட்டம் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார்கள். இதுதான் அவர்களின் வெற்றிக்குக் காரணம். அவர்கள் மக்களை நோக்கிச் செல்கிறார்கள். மக்களோடு மக்களாக இருக்கிறார்கள். தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலும் அவர்களுக்குக் கிளை இருக்கிறது. தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
1.07 TO 3.87%... 'நாம் தமிழர்' வாக்குவங்கி அதிகரித்தது எப்படி?
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறது. இரண்டாவது முறையாக மோடி, வரும் 30-ம் தேதி பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க கூட்டணி 37 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. வாக்குசதவிகிதத்தைப் பொறுத்தவரை தி.மு.க 32.76 சதவிகிதமும், அ.தி.மு.க 18.49 சதவிகிதமும், காங்கிரஸ் கட்சி 12.76 சதவிகிதமும், பா.ம.க 5.42 சதவிகிதமும் அ.ம.மு.க 5.16 சதவிகிதமும், நாம் தமிழர் கட்சி 3.87 சதவிகிதமும், மக்கள் நீதி மய்யம் 3.72 சதவிகிதமும், பி.ஜே.பி 3.6 சதவிகிதமும், தே.மு.தி.க 2.19 சதவிகிதமும் பெற்று தங்களுக்கான வாக்குவங்கியைத் தக்க வைத்துள்ளன.
நாம் தமிழர் கட்சி
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் மற்ற கட்சித் தொண்டர்களைவிட நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள், மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 1.07 சதவிகிதமாக இருந்த கட்சியின் வாக்குவங்கி, 3.87 சதவிகிதமாக அதிகரித்திருப்பதே அதற்குக் காரணம். 2009-ம் ஆண்டு இயக்கமாகத் தொடங்கப்பட்ட அமைப்பை அடுத்த ஓராண்டிலேயே, அதாவது 2010-ல் அரசியல் கட்சியாக பரிணமிக்கச் செய்தார் சீமான். அதைத் தொடர்ந்து, நடந்த 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 மக்களைவைத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடவில்லை. முதன்முறையாக 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டு, 4,58,104 வாக்குகள் பெற்றது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 1.07 சதவிகிம் பெற்று ஒன்பதாமிடத்தில் வந்தது. அந்தத் தேர்தல் முடிவுகள், சீமான் கட்சியினரிடையே மிகுந்த கசப்புணர்வை ஏற்படுத்தியது. அதிகபட்சமாகக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் போட்டியிட்டு 12,497 வாக்குகள் பெற்றார்.
`தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்தும் நமக்கு மக்கள் வாக்களிக்கவில்லையே' என்கிற தவிப்பு ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல் கடைக்கோடித் தொண்டர்கள் வரையிலும் இருந்தது. அதே தேர்தலில் அ.தி.மு.க 134 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 98 இடங்களையும் பிடித்தன. தி.மு.கவும், அ.தி.மு.கவும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்த தமிழக அரசியல் சூழலில், 2011 தேர்தலில் தோல்வியடைந்த தி.மு.க, மீண்டும் வெற்றிபெற முடியாமல் போனதற்கு நாங்கள்தான் காரணம் என்றும், தமிழகத்தில் மாற்றுசக்தி `நாம் தமிழர்' கட்சிதான் என்றும் கட்சி மேடைகளில் முழங்கத் தொடங்கினார் சீமான். அண்ணனின் முழக்கத்தை அவரின் தம்பிகள் அனைவரும் முகநூலில் பரப்பத் தொடங்கினர். அது உண்மையா, கற்பனையா என்ற விவாதத்துக்குள் செல்லாமல் தாங்கள் மீண்டும் புத்துணர்வு பெறுவதற்கான அஸ்திரமாக அதைப் பயன்படுத்திக்கொண்டனர். வாக்குசதவிகிதம் குறைவாக இருந்தாலும் அந்தத் தேர்தலில் பல வித்தியாசமான முயற்சிகளைக் கையாண்டனர்.
தேவி
பொதுத்தொகுதியில், பட்டியலின வேட்பாளர்களை நிறுத்தியது; பெண்களுக்கு அதிக இடங்களில் வாய்ப்பளித்தது; அரசியல் ரீதியாக மிகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தது; ஒரு சமூகம் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பெரும்பான்மையாக இருந்தால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவரைத் தவிர்த்துவிட்டு, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது; திருநங்கையை வேட்பாளராக்கியது என சீமானின் செயல்பாடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். சமூகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக அவை மாறாமல் போனாலும், கட்சித் தொண்டர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. இதுவரை இருக்கிற கட்சிகள் பின்பற்றிவந்த நடைமுறைகளை எல்லாம் சீமான் தகர்த்தது, அவரின் மீதான நம்பிக்கையைத் தொண்டர்களிடத்தில் அதிகப்படுத்தின. கட்சியில் முக்கியமான பல ஆளுமைகள், முக்கியப் பொறுப்பில் இருந்த பலர் கட்சியை விட்டு அவ்வப்போது விலகிச்சென்றாலும், புதிய தொண்டர்கள் சேர்வது நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கு அதுவே காரணம். 2017-ம் ஆண்டு ஆர்.கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு 3,802 வாக்குகள் பெற்றது நாம் தமிழர் கட்சி. அந்தத் தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய பாதிப்பையோ, சோர்வையோ ஏற்படுத்தவில்லை.
காளியம்மாள்
அதற்கடுத்து அவர்களின் ஒவ்வோர் அடியும் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கியே இருந்தது. `மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில் பெண்களைச் சரிசமமாக இருபது தொகுதிகளில் வேட்பாளராக நிறுத்துவேன்' என சீமான் ஒவ்வொரு மேடையிலும் முழங்கி வந்தார். சொன்னதைப் போலவே வேட்பாளர் அறிவிப்பிலும் அதைச் செய்து காட்டினார். 2016 சட்டமன்றத் தேர்தலில் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாத அவரின் இந்தப் புதிய முயற்சிகள் இந்தமுறை பேசுபொருளானது. சீமானை அரசியல் ரீதியாக விமர்சிக்கும் பலரும் அவரின் இந்த முயற்சியை வரவேற்றனர். அப்படி வடசென்னையில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட காளியம்மாள் ஒரு வீடியோவின் மூலம், ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பிரபலமானார். மீடியா கவனம் முழுவதும் காளியம்மாளின் மீது குவிந்தது. அது காளியம்மாள் மீதான பார்வையாக மட்டுமல்லாமல், நாம் தமிழர் கட்சியின் மீதான பார்வையாகவும் மாறியது.
'நாம் தமிழர்' வாக்குவங்கி 1.07 TO 3.87%... அதிகரித்தது எப்படி?
Reviewed by Author
on
May 29, 2019
Rating:
Reviewed by Author
on
May 29, 2019
Rating:


No comments:
Post a Comment