வரலாறு தெரியாத வடக்கு ஆளுநர்? சாடும் மாவை -
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடையாக இருப்பதாக ஆளுநர் பொய்யான கருத்து ஒன்றினை கூறியிருக்கின்றார். ஆளுநருக்கு வரலாறு தெரியாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலைய புனரமைப்பு பணிகள் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்றைய தினம் பலாலி விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
2016ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு தொடர்பாகவும், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை தொடர்பாகவும் யாழ்ப்பாணம் வந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி சில தீர்மானங்களை எடுத்திருந்தோம்.
அதன்படி சீமெந்து தொழிற்சாலை அமைந்திருந்த காணியில் சுமார் 330 ஏக்கரில் பாரிய தொழிற் பூங்கா ஒன்றை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான அமைச்சரவை பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
அதற்கமைய நடக்கவேண்டிய விடயங்கள் நடக்கும். மேலும் இந்திய பிரதமர் இங்கு வந்தபோது அவருடன் வந்த சிலர் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இங்கு ஆரம்பிக்க கேட்டார்கள்.
ஆனால் சீமெந்து தயாரிப்பதற்கான சுன்னாம்பு கற்களை இனிமேல் இங்கு அகழ முடியாது என்பதாலும், நிலத்தடி நீர் மோசமாக பாதிப்படையும் என்பதாலும் சுற்றுசூழலுக்கு பாதகம் என்பதாலும் அதனை நாங்கள் நிராகரித்திருந்தோம்.
அதற்கு பதிலாக கிளிநொச்ச மாவட்டத்தில் கிராஞ்சி பகுதியில் சுன்னாம்பு கல் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு இப்போது மன்னார் பரப்புக்கடந்தான் பகுதியில் ஆய்வுகள் நடக்கிறது.
ஆகவே சீமெந்து தொழிற்சாலை அமைக்க நாங்கள் தடையாக இருக்கின்றோம் என்பது பொய்யான தகவல். அல்லது ஆளுநருக்கு வரலாறு தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு தெரியாத வடக்கு ஆளுநர்? சாடும் மாவை -
Reviewed by Author
on
July 06, 2019
Rating:

No comments:
Post a Comment