சுட்டுக்கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்... மாயமான மனைவி: வலுக்கும் சந்தேகம் -
40 வயதான இலங்கை நாட்டைச் சேர்ந்தவரும், இங்கிலாந்தில் வசிப்பவருமான ஜனார்த்தனன் விஜயரத்னம், செப்டம்பர் 14 அதிகாலையில், அவரது மலேசிய மைத்துனர் மற்றும் இரண்டாவது மலேசிய மனிதருடன் ஒரு வெளிப்படையான கார் துரத்தல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸாரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அப்போது அவர் தனது மனைவி மற்றும் ஐந்து, 10 மற்றும் 17 வயதுடைய மூன்று குழந்தைகளுடன் விடுமுறையில் இருந்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பந்தர் கவுண்டி ஹோம்ஸின் டவுன்ஷிப்பில் காரை நிறுத்துமாறு உத்தரவிட்டும் கூட மூன்று பேரும் வேகமாக காரில் சென்றதாகவும், தற்காப்பிற்காகவே நான்கு மைல் (7 கி.மீ) தூரம் துரத்தி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் பொலிஸார் விளக்கம் அளித்தனர்.
உள்ளூர் ஊடகங்களுக்கு அவர்கள் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சிலாங்கூர் பொலிசார் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினர். மேலும் துரத்தும்போது ஆண்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அதிகாரிகள் தற்காப்புக்காக செயல்பட்டதாகக் கூறினர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு அவர்களுடைய குடும்பத்தினர் மறுப்பு தெரிவிக்கின்றனர். மேலும் மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையம் இப்போது காவல்துறையினரால் "அதிகார துஷ்பிரயோகம்" செய்யப்பட்டுள்ளதா என்று விசாரித்து வருகிறது.
துப்பாக்கி சூட்டில் இறந்த தவசெல்வன் கோவிந்தசாமி மற்றும் மகேந்திரன் சந்திர சேகரன் ஏரளமான திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதோடு, "08" கும்பலின் உறுப்பினர்களாக அங்கம் வகித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதோடு அல்லாமல் காரில் இருந்த ஜனார்த்தனன் விஜயரத்னம், விசா காலம் முடிந்தும் மலேசியாவில் தங்கியிருந்ததாக தகவல் வெளியிட்டிருந்தனர்.
ஆனால் விஜயரத்னத்தின் குடும்பத்தினர் பொலிஸ் கூற்றுக்களை கடுமையாக எதிர்த்ததோடு, முக்கிய உண்மைகள் சேர்க்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதுகுறித்து விஜயரத்னம் குடும்பத்தினர் சார்பில் வாதாடும் மூத்த மனித உரிமை வழக்கறிஞர் பொன்னுசாமி உதயகுமார் கார்டியன் பத்திரிகையிடம் பேசியுள்ளார்.
“இறந்துபோன ஆடவர் மூவரது நெஞ்சிலும் குண்டு பாய்ந்திருக்கிறது. ஒருவருக்கு தலையிலும் குண்டு பாய்ந்துள்ளது. இது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது போல தெரிகிறது". பொலிஸாரின் கூற்றுப்படி, அவர்கள் துரத்தி சென்ற போது, காரில் இருந்தவர்கள் சுட்டதால் அவர்களும் திருப்பி சுட்டதாக கூறியுள்ளனர். அப்படியானால் சுற்றிலும் தோட்டாக்கள் இருக்கும். ஆனால் அங்கு அப்படி இல்லை.
இந்த சம்பவமானது ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் நடைபெற்றுள்ளது. அவர்கள் கூறியிருக்கும் தயாரித்திருக்கும் கதையில் எந்த சாட்சிகளும் இருக்க மாட்டார்கள், துப்பாக்கிச் சூட்டில் எந்த பொலிஸ்காரரும் காயமடைய மாட்டார்கள், பொலிஸ் கார்களில் தோட்டாக்கள் துளைத்திருக்காது. அவர்கள் கூறும் இந்த கதையை ஒருபோதும் நாங்கள் நம்பப்போவதில்லை.
இதுகுறித்து அவர்களுடைய நெருங்கிய குடும்ப நண்பரான சுரேஷ்குமார் கூறுகையில், ஒரு கார் துரத்தும்போது அவர்கள் அனைவரும் மார்பில் எப்படி சுடப்பட்டனர்? அது சாத்தியமற்றது. சிவப்பு வோக்ஸ்வாகன் காரில் சென்றதாக பொலிஸார் கூறியுள்ளனர். ஆனால் அந்த காரை இதற்கு முன் அவர்களுடைய குடும்பத்தினர் யாரும் பார்த்தது கிடையாது.
சனிக்கிழமை காலை ஒரு பொலிஸார், சம்பவ இடத்தில் நான்காவது நபர் இருந்ததாகவும், காலில் சுடப்பட்டபோது, கைது செய்யப்படுவதற்கு முன்பு காட்டுக்குள் தப்பிச் சென்றதாகவும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
ஆனால் அதன்பிறகு நான்காவது நபர் பற்றி கூறவே இல்லை என்று மறுத்துள்ளனர்.
ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த நான்காவது நபர் விஜயரத்னத்தின் மனைவி மோகனாம்பாள் கோவிந்தசாமி (35). மலேசிய நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் இங்கிலாந்தில் வசிப்பவர். மூன்று பேருடன் இரவு உணவிற்குச் சென்ற அவர் அதன்பிறகு காணவில்லை என்று கூறியுள்ளார்.
செப்டம்பர் 14 ஆம் திகதி அதிகாலை 1.38 மணியளவில் மோகனாம்பாள் தன்னுடன் ஒரு ஜி.பி.எஸ் இருப்பிடத்தை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொண்டதாக அவரது சகோதரி வசந்தி கோவிந்தசாமி கூறியுள்ளார்.
மேலும், இதற்கு முன்பு அவரது சகோதரி அப்படி செய்யாததால், அவர் ஆபத்தில் இருப்பதாக தான் நம்புவதற்கு காரணமாக அமைந்தது எனக்கூறியுள்ளார்.
போர்ட்ஸ்மவுத்தில் வசித்து வந்த இந்த தம்பதியினர் ஆகஸ்ட் 27 முதல் மலேசியாவில் தங்கள் குழந்தைகளுடன் விடுமுறையில் இருந்தனர். இதில் ஐந்து வயது இளைய குழந்தை மட்டும் பிரித்தானிய பாஸ்போர்ட் வைத்திருந்தது.
இந்த சம்பவம் குறித்து இங்கிலாந்தின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர், ராஜரத்னத்தின் குடும்பத்துடன் எங்களுடைய அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர். மலேசிய அதிகாரிகளுடனும் சம்பவம் தொடர்பாக பேசி வருகிறோம் என கூறியுள்ளார்.
குடும்ப வழக்கறிஞரின் கூற்றுப்படி, கோலாலம்பூரில் உள்ள பிரித்தானிய தூதரக அதிகாரி தம்பதியினரின் மூன்று சிறார்களை அவர்களுடைய தந்தைவழி தாத்தா பாட்டிகளுடன் இங்கிலாந்துக்குத் திரும்ப உதவி செய்து வருகின்றனர்.
முன்னதாக விஜயரத்னம் இங்கிலாந்தில் வசிப்பவர் அல்ல என்றும் அவர் மலேசியாவிற்குள் நுழைந்ததாக எந்த பதிவும் இல்லை என்றும் பொலிஸார் கூறினர். இருப்பினும், கார்டியன் பத்திரிக்கை விஜயரத்தினம் குடும்பத்தினர் லண்டனில் இருந்து கோலாலம்பூருக்கு திரும்பும் விமானங்களுக்கான ரசீதுகளைக் கண்டது. லக்கேஜ் குறிச்சொற்களைப் சரிபார்த்துள்ளது. போர்ட்ஸ்மவுத் முகவரியில் தம்பதியினருக்கு அனுப்பப்பட்ட வருமான வரி மற்றும் சபை வரி ரசீதுகள், தம்பதியினர் அங்கு வசித்து வருவதாகவும், வேலை செய்வதாகவும் குறிக்கிறது.
அதேபோல இங்கிலாந்தில் வசிக்கும் மற்றொரு குடும்பத்தினர், விஜயரத்தினத்தின் குடும்பம் போர்ட்ஸ்மவுத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்ததை உறுதிபடுத்தியுள்ளனர்.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்... மாயமான மனைவி: வலுக்கும் சந்தேகம் -
Reviewed by Author
on
September 26, 2019
Rating:
Reviewed by Author
on
September 26, 2019
Rating:


No comments:
Post a Comment