லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது; ஒருபோதும் அதற்கு இடமளிக்க வேண்டாம் ! - ஜனாதிபதி கோட்டாபாய தெரிவிப்பு...
லீசிங் வசதிகள் மூலம் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் கடன்
தவணையை செலுத்தத் தவறும் நபரின் வாகனத்தை கைப்பற்றும் லீசிங் நிறுவனங்களின்
நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என்பதினால் அதற்கு இடமளிக்க வேண்டாம் என
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லீசிங் கம்பனிகள் அவ்வாறு வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு முன்னர் பொலிஸாருக்கு தெரியப்படுத்துவதில்லை. அவர்கள் பொலிஸில் முறையிடுவது வாகனத்தை பறிமுதல் செய்ததன் பின்னரேயாகும். பலவந்தமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய பறிமுதல்கள் சிலபோது பாரதூரமான வன்முறைக்கு காரணமாகின்றது. பறிமுதல் செய்ததன் பின்னர் கிடைக்கும் முறைப்பாடுகளை மறு அறிவித்தல் வரை பொறுப்பேற்க வேண்டாம் என நான் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
கொவிட் 19 பரவலுடன் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு குழுவினருக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களின் கீழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்களினால் செலுத்தப்படும் லீசிங் கடன் தவணையை அறவிடுவதை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது. எனது செயலாளரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட 16/2020 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் இரண்டாவது பிரிவில் அது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இருக்கையில் கடன் தவணை செலுத்தாததன் அடிப்படையில் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயலாகும் என நான் சுட்டிக்காட்டியுள்ளேன். எனவே கடன் தவணை செலுத்தாததன் காரணமாக வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் நான் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளேன்.
என கூறியிருந்தார்..

No comments:
Post a Comment