அரசியல் பிச்சைக்காக மக்களின் வாக்குகளைப் பெற முயற்சிக்கும் கருணா மற்றும் பிள்ளையான்........
கடந்த காலத்தில் கருணா, பிள்ளையான் ஆகியோர் குழுக்களாக இருக்கும்போது மக்களை மதிக்கவில்லை எனவும் அவர்கள் மக்களை மிதித்தார்கள் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர்கள் அரசியல் பிச்சைக்காக மக்களின் வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றார்கள் என்றும் இவர்களைப் போன்ற ஒட்டுக் குழுக்களால்தான் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தாய், தகப்பனின்றி இருக்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று
(திங்கட்கிழமை) மாலை காஞ்சிரங்குடாவில் ஞானமுத்து அமிர்தலிங்கம் தலைமையில்
இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் பிரசார மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையற்றிய தர்மலிங்கம்
சுரேஸ், “நாங்கள் இந்தத் தேர்தல் களத்திலே களமிறங்கியிருப்பது நாடாளுமன்ற
ஆசனத்திற்காக அல்ல.
இந்த இனத்தின் விடுதலைக்காகவே ; விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றனர். விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் வடக்கு கிழக்கு பகுதியில் ஒரு அங்குல நிலம்கூட சிங்களவர்களால் அபரிக்கப்படவில்லை.
முன்னர் போரை நடத்திய தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர், பௌத்த பிக்குகள் வடக்கு கிழக்கை அபகரிக்க திட்டமிட்டுள்ளன.
செயலணி அமைத்து தமிழ் மக்களை அடிமையாக்கி இந்த நாடு சிங்கள, பௌத்த நாடு எனவும் இங்கு தமிழர்களுக்கு கலாசாரம் இருக்கக் கூடாது என்றும் மொழி, பொருளாதாரக் கட்டமைப்பு இருக்கக் கூடாது என்பதற்காகவும் இத்தனை கட்சிகளையும் அரசாங்கம் உருவாக்கி வைத்துள்ளது.
தமிழ் மக்களுக்கு இலங்கைத் தீவிலே நடந்தது ஒரு இனவழிப்பு. இந்த இனவழிப்புக்கு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இது இனவழிப்பு என ஐக்கிய நாடுகள் குற்றவியல் நீதிமன்றம் தண்டனை வழங்கும். இதன்மூலம் தமிழ் மக்களுடைய தேசம் மலரும். இதனை யாராலும் தடுக்க முடியாது.
தமிழ் மக்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுப்போம். அந்த விடுதலையை பெற்றுக் கொடுத்த ஒரேயொரு அணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது....
Reviewed by Author
on
July 09, 2020
Rating:



No comments:
Post a Comment