கொக்கட்டிச்சோலையில் தோணி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை தாந்தாக்குளத்தில் தோணியொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 03 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். களுமுந்தன்வெளி பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் பயிலும் மாணவர்கள் குறித்த பகுதிக்கு ஆசிரியரொருவருடன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் சென்றிருந்தனர். இதன்போது, 3 மாணவர்கள் படகு ஒன்றில் பயணித்த சந்தர்ப்பத்தில், அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், அதில் பயணித்த மாணவர்கள் காணாமல்போயுள்ளனர்.
இதனையடுத்து, அவர்களை மீட்பதற்கு முயற்சித்த ஆசிரியர் (வயது 29) நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 16 வயதுகளை உடைய மாணவர்கள் மூவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் ஆசிரியர் ஒருவரே மாணவர்களை அழைத்துச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதிக்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் மரண விசாரணையை முன்னெடுத்ததுடன் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் பணித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Reviewed by Author
on
February 12, 2023
Rating:


No comments:
Post a Comment