சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தினுடைய போக்குகளிற்கு பொறுப்பு கூற வைக்க வேண்டும் து.ரவிகரன்
சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தினுடைய போக்குகளிற்கு பொறுப்பு கூற வைக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகல் தொடர்பாக இன்றையதினம் (30.09.2023) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
AR-673 (2018) என்ற வழக்கில் பௌத்த விகாரை கட்டப்படுகின்ற போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்ற கருத்தை உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்யப்பட்டு அதன் பிரகாரம் சட்டத்தரணிகள் ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்யப்பட்டு தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்ததன் இறுதி தீர்ப்பே 31.08.2023 ல் நடைபெற்றிருந்தது.
இறுதி தீர்ப்பில் தொல்லியல் திணைக்களத்தினுடைய பாராமுகத்தை மூன்று முறைகள் நீதிமன்ற கட்டளைகளை மீறியுள்ளார்கள் என்ற கருத்து உட்பட அங்கே சைவ சமயத்திற்கு மறுப்பு தெரிவிக்காத வகையில் சைவ வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்று வழங்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்திருந்தது.
நீதிபதி அவர்கள் இலங்கை நாட்டிலே தொல்லியல் திணைக்களத்தினுடைய அத்துமீறல்களை சுட்டிக்காட்டிய சம்பவமாகவே பார்க்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் அச்சுறுத்தல் பல் வகையில் வழங்கப்பட்டு சட்டமா திணைக்களத்திற்கு வருகை தருமாறு கூறி அங்கே தீர்ப்பை மாற்றி அமைக்கும்படி கூறப்பட்டிருக்கிறது இதனை விட புலனாய்வாளர்களின் கண்காணிப்பு தீவிரம் , பாதுகாப்பு குறைக்கப்பட்டமை , சரத்வீரசேகர போன்ற இனவாதிகளால் அச்சுறுத்தல்கள் இவ்வாறான சூழ்நிலையில் பதவி விலகல் மூலம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அறியக்கூடியதாக இருக்கின்றது.
நீதிபதிக்கே இந் நிலமை என்றால் தமிழ் மக்களுக்கு எந்த நிலைமை என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. தமிழ் மக்களை பொறுத்தவரை இருள் சூழ்ந்த நாடாகவே பார்க்கப்படுகின்றது.
பெயருக்கு தான் ஜனநாயக சோசலிச குடியரசு நாடாக கூறுகிறார்களே தவிர ஜனநாயகத்தை தேடினாலும் கிடைக்காது. தமிழர்களாகிய நாங்கள் நசுக்கபடுகிறோம், எமது நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன, எமது மதத்தை அழிக்கிறார்கள், பௌத்த மதத்தை திணிக்கிறார்கள், சட்ட விரோத தொழில்களால் கடற்தொழில் செய்ய முடியவில்லை. காடுகள் மற்றும் அழிக்கப்பட்டு மரங்கள் கடத்தப்படுகின்றன, கனியமணல் அகழப்படுகின்றன, கருங்கல் அகழ்வு , கசிப்பு, கஞ்சா போதைப்பொருட்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு பாடசாலைக்கும் புகுந்து விட்டது.
இவ்வாறு நிலமையில் நியாயமான நீதிபதியை வெளியேற்றிவிட்டு நாடு போகும் போக்கு நன்றாகவே தெரிகிறது. சிறுபான்மை மக்கள் இனத்திற்கான பாதுகாப்பிற்கான நாடாக நாங்கள் பார்க்கவில்லை. நிச்சயமாக சர்வதேசம் கவனத்தில் எடுத்து சுமூகமான , நியாயமான தீர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டும். இவ் நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தினுடைய போக்குகளிற்கு கண்டிப்பாக பொறுப்பு கூற வைக்க வேண்டும் . அத்துமீறி நடக்கும் நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தினுடைய போக்குகளிற்கு பொறுப்பு கூற வைக்க வேண்டும் து.ரவிகரன்
Reviewed by Author
on
September 30, 2023
Rating:

No comments:
Post a Comment