இந்து அடிப்படைவாதிகளுக்கு வன்னியில் சைவ பக்தர்களால் எதிர்ப்பு
இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக வன்னி சைவத் தமிழ் பக்தர்களால் வழிபடப்பட்டு வரும் சிவன் ஆலயத்தின் நிர்வாக சபைக்குள் இந்து அடிப்படைவாத குழு ஒன்று நுழைய முற்பட்டதற்கு உள்ளூர் பக்தர்களால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் 2024-2025ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபைத் தெரிவுக்கான கலந்துரையாடல் ஒலுமடு சனசமூக மண்டபத்தில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி, தற்போதைய நிர்வாக சபை, பொது மக்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
ஆதிலிங்கேஸ்வர ஆலய பரிபாலன சபையின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வம் தலைமையில் நயினாமடு முருகன் ஆலய பிரதம குருக்கள் ஜெயசுத குருக்கள் மற்றும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆசிரம வேலன் சுவாமிகள் ஆகியோரின் வழிநடத்தலில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
தீவிர வலதுசாரி இந்திய சிவ சேனா அமைப்பின் ஆதரவுடன் செற்படும் இலங்கையின் சிவ சேனாவின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவினர் எவ்வித அழைப்பும் இன்றி மண்டபத்திற்குள் நுழைந்து, ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையில் தமது அமைப்புக்கு பதவி வழங்குமாறு கோரியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்
ஆலயத்தின் பாதுகாப்பு மற்றும் உரிமையை கோரி பிரதேசவாசிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அக்காலப்பகுதியில் சிவ சேனா அமைப்பினரோ அல்லது மறவன்புலவு சச்சிதானந்தனோ குறைந்தது ஒரு ஊடக அறிக்கையைகை் கூட வெளியிடவில்லை எனத் தெரிவித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த மக்கள், அவர்கள் மண்டபத்தைவிட்டு வெளியேறாவிட்டால் தாம் வெளியேறுவதாக எச்சரித்தனர்.
கலந்துரையாடல் பகுதியை விட்டு வெளியேற சிவ சேனா குழுவிற்கு 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் சிவ சேனா தலைவர்கள் தொடர்ந்து அங்கு தங்கியிருந்ததால் ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பக்தர்கள் ஒலுமடு சனசமூக மண்டபத்தை விட்டு வெளியே வந்தனர். அவர்களை தொடர்ந்து ஆலய நிர்வாக சபையினரும் வெளியேறினர்.
இந்த நிலையில், தற்போதைய நிர்வாக சபையை மேலும் ஒரு வருடத்திற்கு பணியாற்றுவதற்கு அனுமதிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கும் பிரதேச ஊடகவியலாளர்கள், சிவ சேனா அமைப்பைச் சேர்ந்த 5 பேரும் உள்ளூர் பக்தர்களும் ஆலய நிர்வாக சபையினரும் வெளியேறி ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், அவ்விடத்தை விட்டு வெளியேறியதாக குறிப்பிடுகின்றனர்.
வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாசகார கும்பல் சேதப்படுத்தி, மலை உச்சியில் இருந்த ஆதிலிங்கேஸ்வரர் சிலையை அகற்றி புதரில் வீசியெறிந்தது.
இச்சிலைக்கு மேலதிகமாக குறித்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார், அம்மன், வைரவர் ஆகிய மூன்று சிலைகளும் காணாமல் போயிருந்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2024ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி இரவு, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிராத்திரி இரவு வழிபாட்டின்போது, நீதிமன்ற உத்தரவை மீறி விசேட வழிபாட்டை நடத்தியதாகக் குற்றம்சாட்டி, எட்டு சைவத் தமிழர்களையும், பூசைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கைது செய்தனர்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் பொலிஸாரிடம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்து அனைவரையும் விடுதலை செய்து மார்ச் 19ஆம் திகதி வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ் மக்கள் வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வர ஆலயம் என அழைக்கின்றனர், ஆனால் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் இவ்விடம் கடந்த காலத்தில் வட்டமான பர்வத விகாரை என அழைக்கப்பட்டதாக ஒரு கருத்தும் நிலவுகிறது.
Reviewed by Author
on
April 19, 2024
Rating:


No comments:
Post a Comment