பிள்ளையான் தலைமறைவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதுவரை முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் தொலைபேசி வாயிலாக பிள்ளையானை தொடர்பு கொள்ள முயற்சித்த போது கை தொலைபேசி செயலிழந்து உள்ளது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தை வினவிய போது பிள்ளையான் எந்த ஒரு பதிலும் வழங்கவில்லை , அது மட்டுமல்லாது தற்போது தலைமறைவாகி இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
14.11.2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி விசாரணைகளில் இருந்து சில சலுகைகளை பெறுவதற்காக தேர்தல் வரைக்கும் தலைமறைவாக இருக்கலாம் என மேலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
பிள்ளையான தேர்தலில் தோல்வியுற்ற மறு நாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
இவ் விசாரணை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய சேனல் 4 தொலைக்காட்சியில் அவரது முன்னாள் செயலாளர் அசாத் மௌலானா என்பவர் வெளியிட்ட கருத்து குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி ஒளிபரப்பான அந்த காணொளியில் முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் ஏப்ரல் 21 குண்டுதாரிகளுக்கு இடையே இடம்பெற்றதாக கூறப்படும் சந்திப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டிருந்ததது.
அரசியல் எதிரிகளை இலக்கு வைத்து
குறித்த காணொளிக்கு செனல் 4 தொலைகாட்சி 'ஸ்ரீ லங்கா ஈஸ்டர்ஸ் பொம்பிங் டிஸ்பெஜர்ஸ்' எனப் பெயரிட்டிருந்தது.
2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ராஜபக்ஷர்களின் அரசியல் எதிரிகளை இலக்கு வைத்துத் துணை இராணுவ கொலை குழுவின் அங்கத்தவர்களை பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இணைத்துக் கொண்டுள்ளதாக செனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்தியது.
இந்த காணொளியில் அடங்கும் சர்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பிலான சமர்ப்பணங்களை நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் முன்வைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
Reviewed by Author
on
November 12, 2024
Rating:


No comments:
Post a Comment