வடக்கில் இனம் காணப்பட்டுள்ள ஆபத்தை ஏற்படுத்தும் ஆப்பிரிக்க நத்தை
ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள் சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன.
ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கனவே இங்கு அவதானிக்கப்பட்டபோதும் இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது. பயிர்பச்சைகளையெல்லாம் தின்றுதீர்க்கும் இவை, உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு நோய்களைப் பரப்பும் காவிகளாகவும் செயற்படுகின்றன.
இவற்றை இப்போதே கட்டுப்படுத்தத்தவறின் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக இவை அமைய
ஒரு நத்தையிலேயே ஆண், பெண் இனப்பெருக்க அமைப்புகள் இரண்டும் இருப்பதால் இரண்டு நத்தைகள் சோடி சேரும்போது இரண்டுமே முட்டைகளை உருவாக்குகின்றன.
சராசரியாக 5 தொடங்கி 6ஆண்டுகள் வரை வாழுகின்ற ஒரு நத்தை தன் ஆயுளில் 1000க்கும் அதிகமான முட்டைகளை இடுகின்றது. அந்நிய இனமான இவற்றை இரையாக்க இலங்கையின் இயற்கைச் சூழலில் இரைகௌவிகள் எதுவும் இல்லை.
இதனால் பல்கிப்பெருகி இப்போது ஓர் ஆக்கிரமிப்பு இனமாக உருவெடுத்துள்ளது. உலகின் உயிர்ப்பல்வகைமையின் அழிவுக்கு அந்நிய ஊடுருவல் இனங்களும் ஒரு பெருங்காரணமாக உள்ளது.
பகலில் மறைந்திருந்துவிட்டு இரவில் இரைதேடும் ஆபிரிக்க நத்தைகள் பயிர்கள், அலங்காரச் செடிகள், புல்பூண்டுகள் என்று எல்லாவற்றையும் தின்று தீர்த்து வருகின்றன. ஒரு தாவரத்தில் உள்ள நோய்க்கிருமிகளை இன்னொரு தாவரத்துக்குக் காவிச் செல்கின்றன.
இவற்றோடு மனிதர்களில் மூளைமென்சவ்வு அழற்சியை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிப் புழுக்களை இவை காவித்திரிவதும் அறியப்பட்டுள்ளது. ஆபிரிக்க நத்தைகள் பயிர்ச்செய்கைக்கும், உயிர்ப்பல்வகைமைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இலங்கை அரசாங்கம் இதனை அந்நிய ஊடுருவல் இனமாக அறிவித்துள்ளது.
ஆபிரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குத் திணைக்களங்களுக்காகக் காத்திராமல் பொதுஅமைப்புகளும், பொதுமக்களும் முன்வரவேண்டும். உப்பு நீர்க்கரைசல் உள்ள பாத்திரம் ஒன்றில் இவற்றை அமிழ்த்துவதன் மூலம் சுலபமாக அழிக்க முடியும்.
ஆபிரிக்க நத்தைகள் நோய்க்காவிகளாகவும் இருப்பதால் வெறும் கைகளால் நேரடியாகத் தொடாமல் இலைகள், கடதாசிகள் போன்றவற்றால் இவற்றைப் பிடிப்பதே பாதுகாப்பானது.
இதனை ஒரு சமூகக்கடமையாகக்கருதி நாம் விரைந்து செயற்படவில்லையெனில் ஏற்கனவே பாரிய பொருளாதாரச் சீரழிவுக்கும், சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் ஆளாகியிருக்கும் இலங்கை இந்நத்தையாலும் பெரும் சீரழிவுகளைச் சந்திக்கநேரும்.
Reviewed by Author
on
December 23, 2024
Rating:


No comments:
Post a Comment