நாளை பிற்பகல் கரையைத் தொடுகிறது தாழமுக்கம்
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, நாளை (09) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தத் தாழமுக்கமானது தற்போது நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதியான பொத்துவிலுக்குத் தென்கிழக்கே சுமார் 350 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தாழமுக்கம் கரையை நெருங்கி வருவதால், மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் மீனவ மற்றும் கடற்படை சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
January 08, 2026
Rating:


No comments:
Post a Comment