அண்மைய செய்திகள்

recent
-

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்

 தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார். 


மாலை 5 மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

பொதுமக்களின் பங்களிப்பு இந்த நேரத்தில் அவசியமானது என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

எரிபொருட்களை எரிப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு ஏற்படும் என்றும், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் மின்சார முகாமைத்துவத்தை மேற்கொள்வதானது மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதுடன், எரிபொருள் எரிப்பதையும் குறைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். 

பொதுமக்கள் எரிசக்தி வினைத்திறன் கொண்ட உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும் எனத் தெரிவித்த அவர், நிலையான எரிசக்தி அதிகார சபையினால் தற்போது ஒரு முத்திரை முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் LED மின்குமிழ்கள், குளிரூட்டிகள் மற்றும் ஏசி இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் போது எரிசக்தி வினைத்திறன் மிக்க உபகரணங்களைத் தேர்வு செய்ய முடியும் என்றும் கூறினார். 

அதேபோல், எரிசக்தி வினைத்திறன் குறைந்த உபகரணங்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான சட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், குறுகிய காலத்தில் எரிசக்தியை வினைத்திறனாக்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தற்போதைய நிலையில் நாட்டுக்கு மசகு எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் மின்சார உற்பத்திக்காக டீசல் பயன்படுத்தப்படுவதால் மின் உற்பத்திக்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

பகல் வேளையில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், பொதுமக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கான நேரத்தை மாற்றியமைத்து அவற்றை பகல் பொழுதில் செய்துகொண்டால், மின் உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன் மக்களின் மின்சாரக் கட்டணத்தையும் குறைத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.




மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் Reviewed by Vijithan on March 30, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.