அம்பாறை பெண் வைத்தியர் மரணம்: ஐடி காதலனின் மறுபக்கம் அம்பலம்!
அம்பாறை வைத்தியசாலையின் இயன்முறை வைத்தியர் (Physiotherapist) ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன.
அவரது காதலனே சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
இதற்கமைய, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் உள்ள இடமொன்றில் கார் ஒன்றுக்குள் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக நேற்று (17) பிற்பகல் 2.00 மணியளவில் தெல்தெனிய பொலிஸாருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது.
பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, பூட்டப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் சடலம் இருப்பதைக் கவனித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பொலிஸார் அந்த காரின் கதவை உடைத்து அவரது சடலத்தை வெளியே எடுத்து சோதனையிட்டனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் இயன்முறை வைத்தியராக பணிபுரிந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.
அதன்படி, அந்த ஹோட்டலின் சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்தபோது, மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
சந்தேக நபரான காதலன் கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் என்றும், அவர் தற்போது அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இதனால், அவரைக் கண்டுபிடிப்பதற்காகப் போலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
தமது தங்கை நுவரெலியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருப்பதாகவும், அவர் பல நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என்பதால் அந்த இடத்தை சோதனையிட உதவி தேவை என்றும் கூறி கோட்டவெவ, தலாவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (17) காலை நுவரெலியா போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதற்கமைய, நுவரெலியா பொலிஸ் குழுவினர் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று சோதனையிட்ட போது அங்கு யாரும் இருக்கவில்லை.
எனினும், அங்குள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்த போது, கடந்த 16ஆம் திகதி இரவு 9.50 மணியளவில் அந்தப் பெண்ணின் காதலன் அங்கு வரும் காட்சி பதிவாகியிருந்தது.
அங்கு சுமார் 40 நிமிடங்கள் தங்கியிருந்த அந்த நபர், பின்னர் இரவு 10.30 மணியளவில் மயக்க நிலையில் இருந்த இளம்பெண்ணைத் தூக்கிக்கொண்டு வெளியேறியுள்ளார்.
அதன் பின்னர், அவர் அந்தப் பெண்ணைக் காரில் ஏற்றிச் சென்றுள்ளார்.
இளம்பெண் காணாமல் போனமை குறித்து நுவரெலியா பொலிஸார் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்திருந்த பின்னணியில், தெல்தெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் ஒன்றில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக அந்த அழைப்பில் கூறப்பட்டுள்ளது.
அதற்கமைய, தெல்தெனிய பொலிஸ் குழுவினர் அந்த இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது, காரின் முன் இருக்கை நீட்டப்பட்டு, கருப்பு நிற துணியால் மூடப்பட்டிருந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது. பூட்டப்பட்டிருந்த காரின் கதவை உடைத்து பொலிஸார் சடலத்தை வெளியே எடுத்தனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அந்தச் சடலம் நுவரெலியாவில் காணாமல் போன இளம்பெண்ணுடையது என்பது உறுதி செய்யப்பட்டது.
ஷம்யா தர்ஷனி என்ற 34 வயதுடைய அவர், அம்பாறை பொது வைத்தியசாலையில் இயன்முறை மருத்துவ நிபுணராக பணிபுரிந்தவர் என்பதைப் பொலிஸார் கண்டறிந்தனர்.
கண்டி, கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான அவருக்கும், உயிரிழந்த பெண்ணுக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் தனது காதலனுடன் கனடா செல்லும் நோக்கத்தில், வட்டிக்கு மற்றும் சில நபர்களிடமிருந்தும், வங்கியிலிருந்தும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கடனாகப் பெற்று காதலனிடம் கொடுத்துள்ளார்.
இருப்பினும், இதுவரை வெளிநாடு செல்வதற்கான எந்த ஏற்பாடுகளும் நடக்காத பின்னணியில், கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டதால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் தான், அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி நுவரெலியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளார்.
இதற்கிடையில், அவர் தனது சகோதரனைத் தொலைபேசியில் அழைத்து, தான் 3 நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், அம்பாறை வைத்தியசாலையின் மனநல மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்து, தான் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்த மருத்துவர், உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று மனநல மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், கடந்த 16ஆம் திகதி மாலை 4 மணிக்குப் பிறகு பெண்ணின் கைபேசி செயலிழந்ததை அடுத்து, அவரது சகோதரர் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலதிக விசாரணைகளில், பெண்ணின் உடலைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட கார், அவரது காதலனின் அம்பாறை பகுதியைச் சேர்ந்த மற்றொரு காதலிக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், சடலம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையின் பின்னர், மரணத்திற்கான காரணம் குறித்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்ட மரணமா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இதற்கமைய, பெண்ணின் காதலனான தினேத் திஸாநாயக்க என்பவரைக் கைது செய்வதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாரவின் நேரடி மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகின்றன.
அம்பாறை பெண் வைத்தியர் மரணம்: ஐடி காதலனின் மறுபக்கம் அம்பலம்!
Reviewed by Vijithan
on
June 18, 2026
Rating:
Reviewed by Vijithan
on
June 18, 2026
Rating:


No comments:
Post a Comment